பக்கம் எண் :

50அயோத்தியா காண்டம்

     குறிக்கப்பட்டுள்ளமை ஒப்புநோக்கற்கு உரியது. மன்உயிர்க்கு,
அவற்கு - வேற்றுமை  மயக்கங்கள்;‘கு’ உருபு ஏழாம் வேற்றுமையில்
மயங்கியது.                                                   82

                  தயரதன் இராமனை மன்னர்க்குக் கையடை ஆக்குதல்

1396.மொழிந்தது கேட்டலும், மொய்த்து நெஞ்சினைப்
பொழிந்த பேர் உவகையன், பொங்கு காதலன்,
‘கழிந்தது என் துயர்’ எனக் களிக்கும் சிந்தையன்,
வழிந்த கண்ணீரினன், மன்னன் கூறுவான்.

     மொழிந்தது கேட்டலும் - அவ்வாறு அவையில் இருந்தவர்
கூறியதைக் கேட்டவுடனே;  மன்னன் - அரசனாகிய தயரதன்;  நெஞ்சினை
மொய்த்து -
மனத்தினில் முழுதும் நிரம்பி;பொழிந்த பேர் உவகையன் -
வெளிப்பட்ட மிக்க மகிழ்ச்சியையுடையவனும்;  பொங்குகாதலன் -
மேலிடுகின்ற அன்பையுடையவனும்;  கழிந்தது  என்துயர் என - ‘துன்பம்
நீங்கியவனானேன்’என்று; களிக்கும் சிந்தையன் - களிப்பை
வெளிப்படுத்தும் மனத்தை யுடையவனும்; வழிந்தகண்ணீரினன் -
மகிழ்ச்சியால் தானே வழிந்த கண்ணீரையுடையவனுமாகி;  கூறுவான் -
சொல்வான் ஆயினான்.

     நெஞ்சினை - வேறுமை மயக்கம்;   நெஞ்சில் என ஏழாம் வேற்றுமை
பொருளது.                                                   83

1397.‘செம்மையின், தருமத்தின், செயலின், தீங்கின்பால்
வெம்மையின், ஒழுக்கத்தின் மெய்ம்மை மேவினீர்.
என் மகன் என்பது என் ? நெறியின், ஈங்கு, இவன்
நும் மகன்; கையடை; நோக்கும் ஈங்கு’ என்றான்.

     ‘செம்மையின் - (தயரதன் அரசர்களை நோக்கி)  நடுநிலைமையிலும்; 
தருமத்தின்- அரசியல் அறத்திலும்; செயலின் - நற் செய்கையிலும்; 
தீங்கின்பால் வெம்மையின்- திச்செயல்களில் கொண்ட வெறுப்பிலும்;
ஒழுக்கத்தின் நடத்தையிலும்; மெய்மை மேவினீர்- உண்மையாக
இருப்பவர்களே!;  இவன் ஈங்கு - இவ்விராமன்  இனிமேல்;  என்மகன்
என்பது என்
- என் பிள்ளை என்று சொல்லுவது ஏன்?;  நும் மகன் -
உங்கள்பிள்ளையாவான்;  கையடை - அவனை உங்களிடம்
அடைக்கலமாக்கினேன்; ஈங்கு நோக்கும்என்றான் - இங்கே அவ்வாறே
கருதிப்பேணுங்கள்’ என்றான்.

     இவனை என்மகன் என்ன வேண்டா; உங்கள் மகனாகக் கொண்டு
போற்றுங்கள் எனத் தயரதன் கூறினான்.நோக்கும் - பேணுங்கள்; முன்னிலை
வினைமுற்று.                                                  84