பக்கம் எண் :

54அயோத்தியா காண்டம்

சூடுகின்றனர் - தம்மைப் பார்த்தவர்களையெல்லாம் கைகளைத் தலைமேல்
சூடி வணங்கிக்கொண்டு;சொல்வது ஓர்கிலர் - என்ன சொல்வது என்று
சிந்தியாதவர்களாகி; மாடு சென்றனர் -கோசலை பக்கல்  சென்று
சேர்ந்தார்கள்.

     மேற்பாட்டின் தொடர்ச்சி  இதுவாதலின் மங்கையர் நால்வர் ஓடினர்
என உரைத்தார். ஆடி,  பாடி,  பார்த்தவர்க்குக் கரம்  சூடி,  சொல்லுவது
ஓராது,  கோசலை பக்கலில் சென்றனர்என முடித்துக் காட்டுக.  மகிழ்ச்சி
மிகுதி உடையவர்கள் எதிரிற் கண்டவர்களை எல்லாரையும்கும்பிடுதலும், 
ஆடிப் பாடுதலும் சொல்லுவது  அறியாதிருத்தலும் இயல்பு. “வேதியர்
தமைத்தொழும்;வேந்தரைத் தொழும்; தாதியர் தமைத்தொழும்; தன்னைத்
தான் தொழும்; ஏதும் ஒன்று உணர்குறாதுஇருக்கும்; நிற்குமால்: - காதல்
என்றதுவும் ஓர் கள்ளின் தோன்றிற்றே” எனவும், “ஆடும்பாடுமால்”,  
எனவும் (கம்ப. 10202. 10201) பரதனது  மகிழ்ப்பெருக்கைக் கம்பர் பின்னர்க்
காட்டியுள்ளமை கண்டும் அறிக. ‘ஏ’ இரண்டும் அசைகள்.              2

         மகிழ்ந்த மங்கையரைக் கோசலை வினாவ, அவர் விடையிறுத்தல்

1401.கண்ட மாதரைக் காதலின் நோக்கினாள்,
கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை;
‘உண்டு பேர் உவகைப் பொருள்; அன்னது,
தொண்டை வாயினிர்! சொல்லுமின் ஈண்டு!’ என்றான்.

     கொண்டல் வண்ணனை நல்கிய கோசலை - மழை மேகம் போன்ற
திருமேனி உடைய இராமனைப்பெற்ற கோசலை;  கண்ட மாதரை -
(ஆடிப்பாடிக் கரம்சூடிச் சொல்லுவது  ஓராது வந்து)  தன்னைக்கண்ட 
அந்நான்கு பெண்களை; காதலின் - அன்பினால்; நோக்கினாள் - பார்த்து;
‘தொண்டை வாயினிர்! - ஆதொண்டைக் கனிபோன்ற சிவந்த வாயை
உடைய பெண்களே! (உங்களைக்காணுங்கால்); பேர் உவகைப் பொருள் -
பெரிய மகிழ்ச்சிச் செய்தி;  உண்டு- இருக்கிறது (என்று தெரிகிறது); 
அன்னது - அப்படிப்பட்ட மகிழ்ச்சிச் செய்தியை; ஈண்டுச் சொல்லுமின் -
இவ்விடத்தில் சொல்லுங்கள்;’  என்றாள் -  என்று கேட்டாள்.

     கோசலை - கோசல தேசத்தரசன் மகள்.  கோசலம் - இங்குத் தென்
கோசலம். வந்த மங்கையர்கருதிய செய்தியை அவர்கள் கூறாமலே
குறிப்பால் அறிந்தாள், அதனால் ‘உண்டு பேர் உவகைப்பொருள்’ என்றாள்
எனலாம். தன் தோழியர் ஆதலின் அன்போடு நோக்கினாள். இனி ‘இராமன்
தாய்’உலகின் தாய் ஆதலின் அனைவரையும் அன்போடு நோக்கல் அவள்
இயல்பு எனினும் அமையும்.                                     3

1402.‘மன் நெடுங் கழல் வந்து வணங்கிட,
பல் நெடும் பகல் பார் அளிப்பாய்!’ என,