பக்கம் எண் :

544அயோத்தியா காண்டம்

கடன் செய்ய எழுந்த பரதனை வசிட்டன் தடுத்துக்கூறல்  

2231.என்னும் வேலையில் எழுந்த வீரனை,
‘அன்னை தீமையால் அரசன் நின்னையும்,
துன்னு துன்பத்தால், துறந்து போயினான்,
முன்னரே’ என முனிவன் கூறினான்.

    என்னும் வேலையில்- என்று (அவர்கள்) கேட்டுக்கொண்ட சமயத்தில்;
எழுந்த வீரனை - கடன் செய்ய எழுந்தபரதனை;  முனிவன் - வசிட்ட
முனிவன்;  (தடுத்து) ‘அரசன் - தயரதன்’ அன்னைதீமையால் - நின்
அன்னை செய்த தீமையால்; துன்னு துன்பத்தால்- நெருங்கியதுன்பத்தால்;
நின்னையும் - (மகனாகிய) நின்னையும்; முன்னரே - உயிரோடிருந்த
அப்போதே; துறந்து - மகன் அல்லன் எனக் கைவிட்டு;  போயினான் -
இறந்தான்;’  என - என்று (அதனால் நீ உரிமைக்கு ஆகாய் என்று);
கூறினான் -.

     “மன்னே ஆவான் வரும் அப்பரதன் தனையும் மகன் என்று
உன்னேன்; முனிவா அவனும் ஆகான்உரிமைக்கு” (1654) எனத் தயரதன்
கூறலின் வசிட்டன் இங்குத் தடுத்தான் என்க; அது அவன்மட்டுமேஅறிந்த
செய்தி.                                                     130

பரதனின் துயர் மிகுதி  

2232.‘துறந்து போயினான் நந்தை; தோன்றல்! நீ
பிறந்து, பேர் அறம் பிழைத்தது’ என்றபோது,
இறந்து போயினான்; இருந்தது, ஆண்டு, அது
மறந்து வேறு ஒரு மைந்தன் ஆம் கொலாம்.

     (வசிட்டன்) ‘தோன்றல்! - பரதனே!; நீ பிறந்து பேர் அறம்
பிழைத்தது- நீ பிறந்ததனால் பெரிதாகிய (அரசகுலத்து) அறம் தவறிவிட்டது
(மூத்தவன் இருக்க இளையவனாகியநீ வரத்தால் அரசு பெற்றமையால்);
நுந்தை துறந்து போயினான் - (அதனால்)உன்தந்தையாகிய தயரதன்
உன்னை (மகனல்லன் என்று) துறந்து  இறந்தான்;  என்ற போது - என்று
சொல்லிய போது;  இறந்து  போயினான் - (பரதன்) இறந்து போனான்;
ஆண்டு இருந்ததுஅது - அவ்விடத்தில் (பரதன்) இருப்பதாகிய
அத்தோற்றம் காண்பது; மறந்து - தன்தன்மை கெட்டு; வேறொரு
மைந்தன் ஆம் கொலாம்
- வேறு ஒரு மகனாக இருக்கும் போலும்.

     வசிட்டன் சொற்கேட்ட அளவில் பரதன் இறந்து போனான்;
இருக்கின்றவன் பரதன் அன்றோஎனின்? அன்று; இவன் வேறு ஒரு மகன்;
அவனும் தன் தன்மை திரிந்து பரதனைப்போல உருவம்கொண்டுள்ளான்
போலும் என்றவாறாயிற்று. பரதனது துயர் மிகுதி பற்றி இங்ஙனம் கூறினார்.
‘கொல்’ ஐயப்பொருளில் வந்தது.                                 131