எவ்வாறு பொருந்தும்’ என்பது பரதன் அவலவுரையாம். ‘ஏ’ காரம் வினாப் பொருளில் வந்துள்ளது. 133 2235. | ‘பூவில் நான்முகன் புதல்வன் ஆதி ஆம் தா இல் மன்னர், தம் தரும நீதியால் தேவர் ஆயினார்; சிறுவன் ஆகியே, ஆவ! நான் பிறந்து அவத்தன் ஆனவா? |
‘பூவில் நான்முகன் புதல்வன்!- (திருமாலின் திருவுந்தித்) தாமரையில் தோன்றிய பிரமதேவனது புதல்வனாகிய வசிட்டனே!; ஆதி ஆம் தாஇல் மன்னர் - சூரிய குலத்து முன்னோர்களாகிய குற்றமற்ற அரசர்கள்; தம்தரும நீதியால் - தாம் செய்த அறத்தின் முறைமையால்; தேவர் ஆயினார் - (அனைவராலும்தொழப்படுகின்ற) தேவர்களாக ஆயினார்; நான் -; பிறந்து சிறுவன் ஆகியே - பிறந்துசிறுவனாக இருக்கும் பொழுதே; அவத்தன் ஆனவா! - வீணாகப் போய்விட்டபடி என்னே!; ஆவ - ஐயோ!’ நான்முகன் புதல்வன் - பிரமபுத்திரனாகிய வசிட்டன் என்று அண்மைவிளியாகக் கொள்க. “வரசரோருகன் மகன்” (184) என்பது ஒப்புநோக்குக. இனி, காசிபன் எனின் காசிபன் முனிவன் ஆதல்அன்றி அரசன் ஆதல் இல்லை; அன்றியும் அவன் பரதன் குலத்து முன்னோன் எனப்படுதற்கும்இயைபின்மை உணர்க. ‘ஆவ’ என்பது இரக்கக் குறிப்புச் சொல். “சாவ முன்னாள் தக்கன்வேள்வித் தகர் தின்று நஞ்சம் அஞ்சி, ‘ஆவ’ என்று அவிதா இடும் நம்மவர் அவரே” என்னும்திருவாசகப் பாடலையும் இங்குக் (திருவா. திருச்.4) கருதுக. 134 2236. | ‘துன்னு தாள் வளம் சுமந்த தாழையில் பன்னு வான் குலைப் பதடி ஆயினேன்; என்னை! என்னையே ஈன்று காத்த என் அன்னையார் எனக்கு அழகு செய்தவா!’ |
துன்னு தாள் வளம் சுமந்த தாழையில்- நெருங்கிய வளப்பமான அடிமரத்தை உடைய தென்னையின்; பன்னு வான்குலை - பலராலும் பாராட்டப் பெறுகின்ற இறந்த குலையில்; பதடி ஆயினேன் - உள்ளொன்றும் இல்லாத வெறுங்காயாக ஆனேன்; என்னையே ஈன்று காத்த என் அன்னையார் - என்னைச் சுமந்து பெற்றுவளர்த்த என் தாயார்; எனக்கு அழகு செய்தவா - எனக்கு நன்மை செய்தவாறு; என்னையே - என்ன அழகாயிருக்கிறது கண்டீர்களோ?’ தாழை என்பதற்குத் தென்னை என்பது நேர்பொருள் ‘பதடி’ என்பது மக்களுக்குப் பயன்படும்பொருள் அற்ற நெல், தேங்காய் முதலியவற்றைக் குறிக்கும் உள்ளீடு இல்லாத தேங்காயைஊமைக்காய் என்பர். 135 |