பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 547

வசிட்டன் சத்துருக்கனனைக் கொண்டு இறுதிக்கடன் செய்வித்தல்.  

2237.என்று கூறி நொந்து இடரின் மூழ்கும் அத்
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்,
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான் -
நின்று நான்மறை நெறி செய் நீர்மையான்.

    நான்மறை நெறி நின்று- நால் வேத வழியில் தான் நிலை பெற்று
நின்று; செய் நீர்மையான்
- (அவ்வேதவழியிலே) எல்லாவற்றையும்
(குறையறச்) செய்கின்ற தன்மை உடையவனாகிய வசிட்டன்; என்றுகூறி -;
நொந்து இடரின் மூழ்குறும்
- மனம் வருந்தித் துயரில் மூழ்கியுள்ள;
அத்துன்றுதாரவற்கு - அந்த நெருங்கிய மாலை அணிந்துள்ள பரதனுக்கு;
இளைய தோன்றலால் -பின்பிறத்த தம்பியாகிய சத்துக்கனனால்; அன்று -
அப்பொழுது; நேர் -தயரதனுக்குச் செய்ய வேண்டிய; கடன் - இறுதிச்
சடங்குகளை; அமைவது ஆக்கினான்- பொருந்துவதாகச் செய்து முடித்தான்.

     ‘தாரவன்’ - என்பது அரசகுலத்தான் என்பதால் சொல்லப்பெற்றது.
இங்குத் தார்அணிந்திருந்தான் எனல் வேண்டுவதின்று; துக்கச் செயல்கள்
நிகழ்கிறதாகலின்; அணிந்திருந்ததாரைக் கழற்றி எறிவதும், எறியாமையும்
ஆகிய எவற்றையும் சிந்திக்காத மனநிலை பரதனதுஅப்போதயை நிலை. 136

தயரதன் தேவிமார் தீக்குளித்து நற்கதி பெறுதல்  

2238. இழையும் ஆரமும் இடையும் மின்னிட,
குழையும் மா மலர்க் கொம்பு அனார்கள்தாம்
தழை இல் முண்டகம் தழுவு கானிடை
முழையில் மஞ்ஞைபோல், எரியில் மூழ்கினார்.

     குழையும் - ஒல்கித் தளரும்; மா மலர்க் கொம்பு அனார்கள்தாம்-
சிறந்த மலர் பூத்த கொம்பினை ஒத்தவர்களாகிய தேவியர்கள்; இழையும்
ஆரமும் இடையும்மின்னிட
- பொன் வடமும், முத்துவடமும், இடுப்பும்
மாறிமாறி மின்னொளி செய்ய; தழைஇல் முண்டகம் தழுவு காளிடை -
தழையற்ற (செந்)தாமரை மலர்களே நிரம்பியுள்ளகாட்டினிடத்து; முழையில்
மஞ்ஞை போல்
- மலையிடத்து வாழும் மயில் கூட்டம்மூழ்குவதுபோல;
எரியில் மூழ்கினார் - நெருப்பில் மூழ்கி விண்ணுலகு சென்றனர்.

     செந்தாரைக் காட்டினுள் மயில்கல் புகுவதுபோல் நெருப்பிடையே
தேவி மார்மூழ்கினர்என்பதாம்