பக்கம் எண் :

பள்ளிபடைப் படலம் 549

செல்வம்- ‘வினை’ என்பது நன்மை தீமை இரண்டையும் குறிக்கும். ஆயினும்,
தீமையையேபெரும்பாலும் குறித்துநிற்றல் வழக்கு நோக்கி உணர்க. ‘ஈன்ற
தாய்வினை செய்ய அன்றோகொன்றனன் தவத்தின் மிக்கான்’ என்று (7415)
பின்னும் இப்பொருளில் பயின்றுள்ளது காண்க.                    139

பத்து நாள்கள் சடங்குகள் நடைபெறல்  

2241.ஐந்தும் ஐந்தும் நாள் ஊழி ஆம் என,
மைந்தன், வெந் துயர்க் கடலின் வைகினான்;
தந்தை தன்வயின் தருமம் யாவையும்,
முந்தை நூலுளோர் முறையின் முற்றினான்.

     மைந்தன் - பரதன்; ஐந்தும் ஐந்தும் நாள்- பத்து நாள்களும்; ஊழி
ஆம் என - ஒரு யுகக்காலம் போலத் தோன்ற;  வெம் துயர்க் கடலின்
வைகினான்
- கொடியதுன்பக் கடலில் கிடந்து; தந்தை தன்வயின் -
தந்தையிடத்து; தருமம் யாவையும் -செய்யக் வேண்டிய இயல்புகள்
(சடங்குகள்) எல்லாவற்றையும்; முந்தை நூலுளோர் முறையின் -
முன்னோர் கூறிய ஒழுக்க நூல்களிற் கண்டுள்ள முறைப்படியே;
முற்றினான் - செய்து முடித்தான்.

     சத்துருக்கனனைக் கொண்டு செய்து  முடித்தான் என்பது  கருத்து.
தலைமை  பரதன் மேற்றாதலின்மைந்தன் என்றது  பரதனையே குறிக்கும்;
தந்தைக்குரிய கடன்களைச் சத்துருக்கனன் செய்தான்ஆயினும், பரதன்
தானே தன்பொருட்டு ஆற்றவேண்டிய நீர்க்கடன் முதலியவற்றை
ஆற்றினான்என்றலும் ஒன்று.                                   140

வசிட்டனும் மந்திரக்கிழவரும் பரதனை வந்து அடைதல்  

2242.முற்றும் முற்றுவித்து உதவி, மும்மை நூல்
சுற்றம் யாவையும் தொடரத் தோன்றினான்,
வெற்றி மா தவன் - வினை முடித்த அக்
கொற்ற வேல் நெடுங் குமரற் கூறுவான்;

    வெற்றி மா தவன்- எய்தன எய்தற்பாலதாய சிறந்த பெருந்தவத்தைச்
செய்து  முடித்த வசிட்டன்; முற்றும் - தயரதனுக்குரிய சடங்குகள் முழுதும்;
முற்றுவித்து  உதவி - நிரம்புமாறு செய்துதவி; (பிறகு) மும்மை நூல்
சுற்றம் யாவையும் தொடர
- முப்புரிநூல் அணிந்த வேதியர் அனைவரும்
தன்னைத் தொடர்ந்து வர; தோன்றினான் - பரதன் அரண்மனையில்
தோன்றினான்; வினை முடித்த - தயரதனுக்குச் செய்யவேண்டிய இறுதிச்
செயல்களைச் செய்து நிறைவேற்றிய; அக் கொற்ற வேல் நெடுங் குமரன்-
அந்த வெற்றி பொருந்திய வேலை ஏந்திய உயர்ந்தகுமரனாகிய பரதனுக்கு;
கூறுவான் - எடுத்துச் சொல்லலானான்.