பக்கம் எண் :

ஆறு செல் படலம் 579

     ‘திருஅரை சீரை சாத்தினான்’ என்றது இதுகாறும் சிறப்பு மிக்க
பொன்னாடைகளை அணிந்தது என அதன் சிறப்பு உணர்த்தற்கு. மேலும்
மேலும் பரதனுக்குத் துக்கம் பொங்குதலைப் ‘பிறந்ததுன்பொடும்’ எனக்
குறித்தார்.                                                    52

தாயர் முதலியோர் பரதனுடன் வருதல்  

2296.தாயரும், அருந் தவத்தவரும், தந்தையின்
ஆய மந்திரியரும், அளவு இல் சுற்றமும்,
தூய அந்தணர்களும், தொடர்ந்து சூழ்வரப்
போயினன் - திரு நகர்ப் புரிசை வாயிலே.

     தாயரும் - (கோசலை, கைகேயி, சுமித்திரை முதலிய) தாய்மார்களும்;
அருந்தவத்தவரும் - செய்தற்கரிய தவத்தைச் செய்த முனிவர்களும்;
தந்தையின் ஆயமத்திரியரும் - தன் தந்தையாகிய தயரதன் கண்
பொருந்திய மந்திரிமார்களும்;  அளவுஇல் சுற்றமும் -அளவிட முடியாத
பலவாகிய சுற்றத்தார்களும்;  தூய அந்தணர்களும் -தூய்மையான
வேதியர்களும்; தொடர்ந்து  சூழ்வர - தன்னைப் பின்பற்றிச் சுற்றிவர;
திருநகர்ப் புரிசை வாயில் போயினன் - அழகிய அயோத்தி நகரத்து
மதிலின் (முதன்மையான)வாயிலைச் சென்றடைந்தான்.

     தந்தை போலப் பாராட்டத் தகும் மந்திரியர் என்றும் ஆம். அளவில்
சுற்றம் -உறவினர்களையும்,  அரசச் சுற்றத்தையும் குறிப்பிடும்.  இராமனை
அழைத்து  வருதலில்அனைவர்க்கும் உள்ள ஆர்வ மிகுதி இதனால்
புலப்படும். ‘ஏ’ காரம்  ஈற்றசை.                                 53

சத்துருக்கனன் கூனியைத் துன்புறுத்தப் பற்றவே, பரதன் விலக்கல்  

2297.மந்தரைக் கூற்றமும், வழிச் செல்வாரொடும்
உந்தியே போதல் கண்டு, இளவல் ஓடி, ஆர்த்து
அந்தரத்து எற்றுவான் அழன்று பற்றலும்,
சுந்தரத் தோளவன் விலக்கிச் சொல்லுவான்;

     இளவல் - நால்வரினும் இளையவனாகிய சத்துருக்கனன்;  வழிச்
செல்வாரொடும் -
(இராமனைக் கண்டு அழைக்கக் காடு நோக்கி)
வழிச்செல்லும் அவர்களோடு; மந்தரைக் கூற்றமும்- மந்தரையாகியயமனும்;
உந்தியே போதல் கண்டு - மற்றவர்களைத் தள்ளிக்கொண்டுமுந்திச்
செல்லுதல் கண்டு; ஓடி - விரைந்து சென்று; ஆர்த்து - பேரொலிசெய்து;
அழன்று - கோபித்து;  அந்தரத்து எற்றுவான் - ஆகாயத்தில் மேலே
வீசுமாறு; பற்றலும்- (கையாற்) பற்றிக் கொள்ளுதலும்; சுந்தரத் தோளவன்-
அழகிய திருத் தோள்களை உடைய பரதன்; விலக்கி - (அவ்விடத்திலிருந்த
மந்தரையை); விடுவித்துச் சொல்லுவான் - (தம்பிக்குச்) சொல்லலானான்.