பக்கம் எண் :

கங்கை காண் படலம் 585

2305.அடிமிசைத் தூளி புக்கு, அடைந்த தேவர்தம்
முடி உறப் பரந்தது ஓர் முறைமை தேர்ந்திலெம்;
நெடிது உயிர்த்து உண்டவும், நீந்தி நின்றவும்
பொடிமிசைப் புரண்டவும், புரவி ஈட்டமே.

     அடிமிசைத் தூளி புக்கு - (குதிரைகளின்) அடியின் மேல் எழுந்த
தூசி(அமரருலகத்தில்) புகுந்து;  அடைந்த தேவர்தம் - அங்கே உள்ள
தேவர்களது;  முடி உற- தலைமீது  படும்படி; பரந்தது - (தேவருலகு
முழுமையும்) பரவியது (ஆகிய); ஓர் முறைமைதேர்ந்திலெம் - ஒரு
தன்மையை (அனுமானிக்க முடிகிறதன்றி) மனிதராகிய (எம்மால்)
ஆராய்ந்தறிய இயலவில்லை; நெடிது உயிர்த்து உண்டவும் - பெருமூச்சு
விட்டு (நீரைப்)பருகியவையும்; நீந்தி நின்றவும் - (நீரில்) நீந்திக்கொண்டு
இருந்தவையும்; பொடிமிசைப் புரண்டவும் - மண்ணில் விழுந்து
புரண்டவையும்; (எல்லாம்) புரவி ஈட்டமே- குதிரைத் தொகுதிகளே.
(வேறில்லை)

     புழுதி, மேல் படர்ந்து சென்று வானுலகத்தில் தேவர்களை
முழுக்காட்டிய செய்தி நாம்அறியோம். ஆயினும், இங்கே நீரிலும் நிலத்திலும்
நின்றவை யெல்லாம் குதிரைகளே என்றதுகுதிரைப் படையின் மிகுதி
கூறியவாறு. ‘ஏ’ காரம் ஈற்றசை.                                   3

2306.பாலை ஏய் நிறத்தொடு, பண்டு தான் படர்
ஓலை ஏய் நெடுங் கடல், ஓடிற்று இல்லையால்;-
மாலை ஏய் நெடு முடி மன்னன் சேனை ஆம்
வேலையை மடுத்தது, அக் கங்கை வெள்ளமே.

     அக் கங்கை வெள்ளம் - அந்தக் கங்கையாற்றின் நீர்ப் பெருக்கு;
பாலை ஏய்நிறத்தொடு - பால் ஒத்த வெண்மை நிறத்துடன்; தான்
பண்டு படர் -
தான் முன்புசென்று சேர்கின்ற; ஓலை ஏய் நெடுங்கடல்-
ஆரவாரம் பொருந்திய நீண்ட கடலின்கண்; ஓடிற்று  இல்லை - சென்று
கலந்தது இல்லை; (ஏன் எனில்) மாலை ஏய் நெடுமுடி -பூமாலை
பொருந்திய நீண்ட மகுடத்தை உடைய;  மன்னன் சேனை ஆம்
வேலையே
- பரதனது சேனையாகிய கடலே; மடுத்தது - உண்டு விட்டது.

     பரதனது  சேனைக்கடல் வழிவந்த இளைப்பினால் கங்கை நீரைப்
பருகிய படியால் கங்கையில் நீரே இல்லையாகிவிட்டது; எனவே,  கடலில்
கங்கை கலக்கவில்லை எனஉயர்வு நவிற்சியாகக் கூறிச் சேனை மிகுதியைக்
காட்டினார். ‘ஓல்’-ஒலி மிகுதி. “பாலை ஏய்நிறத்தொடு....ஓடிற்றில்லை” என
உரைத்து மதநீர்ப் பெருக்கு்க் கலந்தலாலும்,  சேனை மிகுதிஉழக்கலாலும்
கங்கையின் கங்கையின் வெண்ணிறம் மாறிக் கடலில் கலந்தது என்பாருளர்.
பின்னர்ச் சேனையாம் வேலையே மடுத்தது என வருதலின் அது ஒவ்வாமை
அறிக. கடலினும் சேனைமிகுதி