பக்கம் எண் :

60அயோத்தியா காண்டம்

     ஒல்கல் இல்தவத்து - தளர்ச்சி இல்லாத தவத்திற் சிறந்த;
உத்தமன்
-புண்ணியனாகிய  வசிட்டன்;  ஓதும் நூல் - கற்றற்குரிய
நூல்களையும்;  மல்குகேள்விய - நிரம்பிய கேள்வியறிவினையும் உடைய;
வள்ளலை - இராமனை; நோக்கினான்- பார்த்து;  போர்வலாய்! -
போரில் வல்லவனே!;  புல்கு காதல் புரவலன் -(உன்பால்)  நெருங்கிய
பிரியத்தை உடைய அரசன் தயரதன்;  நினக்கு - உனக்கு; நானிலம்-
அரசாட்சியை;  நாளை - நாளைக்கு;  நல்கும் - தருவான்; என்றான்-
என்று சொன்னான்.

     ஒல்குதல் - வளைதல்;  இங்கே தவத்துக்கு வளைதல் ஆவது 
தளர்ச்சியாதலின் தளர்ச்சியில்லாததவம் என்று உரை ஆயிற்று. கற்றறிவாகிய
நூற் கல்வியைக் கேள்வி பின்னும் அகலப்படுத்தலான்கேள்வியைப் பின்
வைத்தார். கேள்வியாவது - கேட்கப்படும்  நூல்களைக் கற்றறிந்தார் கூறக்
கேட்டல்.கற்றவழி அதனின் ஆய அறிவை வலியுத்தலானும், கல்லாத
வழியும் அதனை உண்டாக்குதலானும்  இது கல்வியின்பின்வைக்கப்பட்டது
என்ற பரிமேலழகர் உரையை இங்குக் கருதுக.  (குறள். 42ஆம் அதிகாரம்
முகவுரை).  நானிலம் - நால் நிலம் - முல்லை,  குறிஞ்சி, மருதம், நெய்தல்
என உலகம் நான்காகப்பகுக்கப்படுதலின் உலகத்தைக் குறிப்பதாயிற்று.
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித்தொகை.  அது ஈண்டு
உலகத்தை ஆளும் அரசாட்சியுரிமையைக் குறித்தது. ஆகுபெயர். கேள்விய -
கேள்விகளை உடைய - குறிப்புப் பெயரெச்சம்.                    13

வசிட்டன் இராமனுக்குக் கூறிய அறவுரை  

1412.என்று, பின்னும் இராமனை நோக்கி, ‘நான்
ஒன்று கூறுவது உண்டு, உறுதிப்பொருள்;
நன்று கேட்டு, கடைப்பிடி நன்கு’ என,
துன்று தாரவற் சொல்லுதல் மேயினான்;

     என்று - என்று சொல்லி; பின்னும் - மேலும்; இராமனை நோக்கி -
இராமனைப் பார்த்து;  ‘நான் கூறுவது உறுதிப்பொருள் ஒன்று உண்டு -
நான் (உனக்குச்)சொல்ல வேண்டுவதாய் நன்மைப் பொருள் ஒன்று  உள்ளது;
நன்று கேட்டு - அதைக் கவனித்துக்கேட்டு; நன்கு கடைப்பிடி -
அழுத்தமாகப் பின்பற்றுவாயாக;’   எனா - என்று; துன்று தாரவன்(ற்) -
நெருங்கிய மாலை அணிந்த இராமனுக்கு; சொல்லுதல் மேவினான் - 
சொல்லத் தொடங்கினான்;

     உறுதிப்பொருள் - நன்மைதரும்  செய்தி - அறவுரை என்றாகும்.
‘ஒன்று’ என்று  கூறுவது  தொடங்குங்காற்கூறும் வழக்குப்பற்றி.  பின்னர்ப்
பலவும் கூறினும் அவையெல்லாம்  ‘உறுதிப்பொருள்’  என்ற ஒன்றில்
அடங்குதலின் அதுபற்றி ஒன்றும் ஆகும்  கடைப்பிடி உறுதியாகப் பற்றுதல்
ஆகும்.  இறுதிவரை விடாதுஒழுகுதல் கடைப்பிடியாம். ‘துன்றுதாரவன்’
எனச் சந்தி பிரியாதது அங்ஙனம் பிரிப்பின் எழுவாய்த்தொடராய்ப்
பொருள்தந்து மயக்கமாம் ஆதலின் இது வேற்றுமைத் தொகைநிலைத்தொடர்
என்பது உணர்தற்குமஈறு மெய்திரிதலாகியபுணர்ச்சிபெற்ற நிலையில்
‘தாரவற்’ எனப் பிரித்துக்காட்டியமை போற்றி உணர்க.               14