பக்கம் எண் :

கங்கை காண் படலம் 603

துணைவனாகத் தழுவிக் கொண்டான்’ என்ற சொல் செவிப்படும்
முன்னமேயே பரதனது உள்ளம் உவகையால் நிறைந்தது என்பது பரதன்
இராமன்பால் கொண்ட பேரன்பை எடுத்துக்காட்டும். பாகவதர்களாய்
உள்ளார் ஒருவர் ஒருவரினும் முற்படுதல் இயல்பு. ‘என் முன்னே’ என்பதற்கு,
அந்தக் குகன் இராமனால் தழுவிக் கொள்ளப்பெற்ற துணைவனேல்
என்னுடைய முன் பிறந்த தமையனே ஆவான் எனப் பொருள்படுதல் இங்கு
மிகவும் பொருந்தும். தமையனைத் தம்பி சென்று காணுதல் பொருந்தும்
அன்றித் தம்பியைத் தமையன் வந்து பார்த்தல் பொருந்தாது ஆதலின்
யானே சென்று காண்பன் என்றானாம். ‘என் முன்னே’ என்று குகன்
பரதனின் தமையன் ஆதலை, ‘இன் துணைவன் இராகவனுக்கும்;
இலக்குவற்கும், இளையவற்கும், எனக்கும் மூத்தான்’ (2367) என்று கோசலா
தேவியிடத்துக் குகனைப் பரதன் அறிமுகப்படுத்தியவாற்றான் அறிக.
சுமந்திரன் தயரதனது மந்திரி ஆதலின் ‘தந்தை துணை’ ஆயினன். பின்னர்ப்
பரதன் “எந்தை இத்தானை தன்னை ஏற்றுதி” (2349) என அவனைத்
தந்தையாகவே கூறுமாறும் இதனால் அறிக. பரதன்மாட்டுக் குகன் ‘துரிசு’
நினைத்தான் ஆதலின், அக்குறிப்புப் பொருள் பற்றித் ‘துரிசு இலாத் திரு
மனத்தான்’ என்றது இங்கு மிகவும் பொருந்தும்.                      27

பரதன் நிலை கண்டு, குகன் திடுக்கிடுதல்  

2330.என்று எழுந்த தம்பியொடும்,
     எழுகின்ற காதலொடும்,
குன்று எழுந்து சென்றது எனக்
     குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திரு மேனி
     நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்;
     துண்ணென்றான்.

     (பரதன்) என்று - இவ்வாறு சொல்லி;  எழுந்த தம்பியொடும் -
தன்னுடன்புறப்பட்ட சத்துருக்கனனொடும்;  எழுகின்ற காதலொடும் -
(இராமனிடத்தில்அன்புடையவனும், இராமனால் அன்பு செய்யப்
பெற்றவனும் ஆகிய குகனைப் பார்க்கப் போகிறோம்என்று) உள்ளே
மேலும் மேலும் உண்டாகின்ற பேரன்போடும்; குன்று எழுந்து சென்றது
என -
ஒருமலை புறப்பட்டுச் சென்றது என்று சொல்லுமாறு; குளிர்
கங்கைக் கரை குறுகி-
குளிர்ச்சி மிகுந்த கங்கையின் வடகரையை அணுகி;
நின்றவனை - நின்ற பரதனை; துன்று கரு நறுங் குஞ்சி எயினர் கோன்-
நெருங்கிய கருமையான மணம் வீசும் தலைமுடி உடையவேடர் தலைவனாய
குகன்; நோக்கினான் - கண்ணால் (மனக் கருத்தோடு) பார்த்தான்;
திருமேனி நிலை - வாடிச் சோர்ந்துள்ள பரதனது திருமேனியின்
வாட்டமான உணர்ந்து கொண்டான்; துண் என்றான் - திடுக்குற்றான்.