பக்கம் எண் :

கங்கை காண் படலம் 613

  ‘எவ் வழி உறைந்தான் நம்முன்?’
     என்றலும், எயினர் வேந்தன்,
‘இவ் வழி , வீர! யானே காட்டுவல்;
     எழுக!’ என்றான்.

    அருள் தரு வாரி அன்ன - கருணைப் பெருங்கடலை ஒத்த;
செவ்வழி உள்ளத்து அண்ணல் - நேரிய வழியிற் செல்லும்மனத்தை
உடைய பரதன்;  அவ் வழி - அப்போது; அவனை நோக்கி - குகனைப்
பார்த்து; தென்திசைச் செங்கை கூப்பி - இராமன் சென்றுள்ள
தென்திசையைப் பார்த்துத்தன் சிவந்த கைகளைக் குவித்து  வணங்கி;
‘நம்முன் - நம்முடைய அண்ணன்; எவ்வழிஉறைந்தான்?’ - எந்த
இடத்தில் தங்கியிருந்தான்?; என்றலும் - என்றுகேட்டவுடனே; எயினர்
வேந்தன்
- வேட அரசனாகிய குகன்; ‘வீர! - வீரனே!; இவ் வழி -
இவ்விடத்தில்; யானே காட்டுவல் - நானே (அவ்விடத்தை உனக்குக்)
காண்பிப்பேன்;  எழுக’ - என்னுடன் புறப்படுவாயாக; என்றான் -.

     ‘தென் திசைச் செங்கை கூப்பி’ - ‘திசை நோக்கித் தொழுகின்றான்’
(2332.)  எனமுன்னர் வந்ததும் காண்க. ‘இவ்வழி’ என்பதற்கு ‘இந்த
இடமாகும்’ என்று குகன் அவ்விடத்தையும்காட்டிச் சுட்டிச் சொல்லியதாக
முடித்துக் காட்டலும் ஒன்று.                                    38

          இராமன் வைகிய இடம் கண்ட பரதன் நிலையும் நினைவும்

2341. கார் எனக் கடிது சென்றான்;
     கல்லிடைப் படுத்த புல்லின்,
வார் சிலைத் தடக் கை வள்ளல்,
     வைகிய பள்ளி கண்டான்;
பார்மிசைப் பதைத்து வீழ்ந்தான்;
     பருவரற் பரவை புக்கான்-
வார் மணிப் புனலால் மண்ணை
     மண்ணுநீர் ஆட்டும் கண்ணான்.

     (குகன் காட்டிய இடத்துக்குப் பரதன்) கார் எனக் கடிது சென்றான் -
மேகம் போலவிரைவாகச் சென்று; வார் சிலைத் தடக்கை வள்ளல் -
கட்டமைந்த வில்லேந்திய நீண்டகைகளை உடைய இராமன்; வைகிய -
தங்கியிருந்த; கல்லிடைப் படுத்த புல்லின் பள்ளி -கற்களின் இடையே
பரப்பப்பெற்ற புல்லால் ஆகிய படுக்கையை; கண்டான் - பார்த்து;
பார்மிசை - பூமியின் மேல்; பதைத்து - துடித்து; வீழ்ந்தான் - விழுந்து;
பருவரல் பரவை புக்கான் - துன்பம் எனும் கடலில் புகுந்து; வார் மணிப்
புனலால்
- பெருகுகின்ற முத்துமணி போன்ற கண்ணீரினால்;