பக்கம் எண் :

கங்கை காண் படலம் 621

குழுவாக ஏற்றப்படுவோர் என உள்ள எல்லாம் அடங்க, ‘வரிசையின்
வழாமை’ என்றும், ‘மரபுளி வகையின்’ என்றும் கூறினார். சேனைக்கடல்
யாறு ஏறிற்று என்றது ஒரு நயம். அன்றே என்றது வியப்புக் குறித்து வந்தது.
‘அன்று’, ‘ஏ’ அசைகள்.                                         48

2351. இடிபடு முழக்கம் பொங்க,
     இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப, ஊழி
     இறுதியின் மொய்ப்ப போலக்
கொடியோடு வங்கம் வேலை
     கூம்பொடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின,
     நெடுங் கை வேழம்.

     இன மழை - கூட்டமான மேகங்கள்; இடிபடு முழக்கம் பொங்க -
ஒன்றுடன் ஒன்றுமோதுவதால் உண்டாகிய முழக்க ஒலி அதிகரிப்ப; ஊழி
இறுதியின்
- யுகப்பிரளயகாலத்தே;  மகர நீரை - கடல் நீரை; முடிவுஉற
முகப்ப
- அடியோடு வற்றும்படிமொண்டு உண்பதற்காக; மொய்ப்ப
போல
- நெருங்கி யுள்ளவை போலவும்;  கொடியோடுவங்கம் -
கொடியோடு கூடிய கப்பல்; வேலை - கடலின்கண்;  கூம்பொடு -
பாய்மரத்தோடு; படர்வ போல - செல்வன போலவும்; நெடுங்கை வேழம் -
நீண்டதுதிக்கையை உடைய யானைகள்; நெடிய கை எடுத்து நீட்டி -
தமது நீண்ட துதிக்கையை உயரத்தூக்கி; நீந்தின- (கங்கையில்) நீந்திச்
சென்றன.

     மகரம் என்பது கறாவைக் குறிக்கும். அதனை உடைய நீர் எனவே
கடல் ஆயிற்று. கங்கையில் நீந்திச் செல்லும் யானைகளுக்கு இரண்டு
உவமைகள் கூறினார் - ஊழிக்காலத்து மேகங்கள் ஒன்றாய்க் கடல்நீரை
வற்றக் குடிப்பன போலவும், கப்பல் பாய்மரத்துடன் கடலில் செல்வது
போலவும் என.                                                49

2352. சங்கமும் மகர மீனும்,
     தரளமும் மணியும் தள்ளி,
வங்க நீர்க் கடலும் வந்து
     தன் வழிப் படர, மானப்
பொங்கு வெங் களிறு நூக்க,
     கரை ஒரீஇப் போயிற்று அம்மா -
கங்கையும் இராமற் காணும்
     காதலது என்ன மாதோ!

     மானம் - பெருமை பொருந்திய; பொங்கு - மேல்கிளம்பிய;
வெங்களிறு
-கொடிய யானைகள்; நூக்க - தள்ளுதலால்; சங்கமும்
மகரமீனும் தரளமும் மணியும்தள்ளி - சங்கு, சுறாமீன், முத்து,