தாயர் பல்லக்கில் வர, பரதன் முதலியவர் நடந்து செல்லுதல் 2373. | இழிந்த தாயர் சிவிகையின் ஏற, தான், பொழிந்த கண்ணின் புதுப் புனல் போயினான்- ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் - கழிந்தனன், பல காவதம் காலினே. |
(தோணியிலிருந்து) இழிந்த - இறங்கிய; தாயார் - தாய்மார்கள்; சிவிகையின் ஏற- பல்லக்கில் ஏறி உடன்வர; (பரதன்) கண்ணின் பொழிந்த புதுப் புனல்போயினான் - கண்ணிலிருந்து பொழிந்த புதிய கண்ணீரில் நடந்து சென்றான்; குகனும்ஒழிந்திலன் உடன் ஏகினான் - குகனும் தன் நாட்டில் தங்காமல் பரதனுடன் சென்றான்; காலில் பல காவதம் கழிந்தனன் - (இங்ஙனம் பரதன்) காலால் பல காவத வழிகளை நடந்து கடந்தான். கண்ணிலிருந்து நீர் சிந்த. அதன் மேல் நடந்து பல காவதம் கடந்து சென்றான் என்பதைப்புதுப்புனல் போயினான் என்றார். ‘ஏ’ ஈற்றசை. 71 பரதனைப் பரத்துவாச முனிவர் எதிர்கொள்ளல் 2374. | பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர் வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம், அருத்தி கூர, அணுகினன்; ஆண்டு, அவன் விருத்தி வேதியரோடு எதிர் மேவினான். |
(பின்பு பரதன்) பரத்தின் நீங்கும் - வினைச் சுமையிலிருந்து விலகிய; பரத்துவன் - பரத்துவாசன்; என்னும் பேர் வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்- என்கின்ற பேரை உடைய மேன்மையிற் சிறந்த உயர்ந்த முனிவன் தங்கிய ஆச்சிரமத்தை; அருத்தி கூர - அன்பு மிக; அணுகினன் - சேர்ந்தான்; அவன் - அப்பரத்துவாசன்; ஆண்டு - அவ்விடத்தில்; விருத்தி வேதியரோடு - அறுதொழில் உடைய அந்தணரோடு; எதிர்மேவினான் - எதிர்கொண்டு வந்தான். விருத்தி - தொழில். இங்கு ‘ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல் ஈதல், ஏற்றல் என்ற ஆறும் ஆம்.’ 72 |