பக்கம் எண் :

கங்கை காண் படலம் 637

தாயர் பல்லக்கில் வர, பரதன் முதலியவர் நடந்து செல்லுதல்  

2373. இழிந்த தாயர் சிவிகையின் ஏற, தான்,
பொழிந்த கண்ணின் புதுப் புனல் போயினான்-
ஒழிந்திலன் குகனும் உடன் ஏகினான் -
கழிந்தனன், பல காவதம் காலினே.

     (தோணியிலிருந்து) இழிந்த - இறங்கிய; தாயார் - தாய்மார்கள்;
சிவிகையின் ஏற- பல்லக்கில் ஏறி உடன்வர; (பரதன்) கண்ணின் பொழிந்த
புதுப் புனல்போயினான்
- கண்ணிலிருந்து பொழிந்த புதிய கண்ணீரில்
நடந்து  சென்றான்; குகனும்ஒழிந்திலன் உடன் ஏகினான் - குகனும்
தன் நாட்டில் தங்காமல் பரதனுடன் சென்றான்;  காலில் பல காவதம்
கழிந்தனன்
- (இங்ஙனம் பரதன்) காலால் பல காவத வழிகளை நடந்து
கடந்தான்.

     கண்ணிலிருந்து நீர் சிந்த. அதன் மேல் நடந்து பல காவதம் கடந்து
சென்றான் என்பதைப்புதுப்புனல் போயினான் என்றார். ‘ஏ’ ஈற்றசை.   71

                   பரதனைப் பரத்துவாச முனிவர் எதிர்கொள்ளல்  

2374. பரத்தின் நீங்கும் பரத்துவன் என்னும் பேர்
வரத்தின் மிக்கு உயர் மாதவன் வைகு இடம்,
அருத்தி கூர, அணுகினன்; ஆண்டு, அவன்
விருத்தி வேதியரோடு எதிர் மேவினான்.

     (பின்பு பரதன்) பரத்தின் நீங்கும் - வினைச் சுமையிலிருந்து விலகிய;
பரத்துவன் - பரத்துவாசன்;  என்னும் பேர் வரத்தின் மிக்கு உயர்
மாதவன் வைகு இடம்
- என்கின்ற பேரை உடைய மேன்மையிற் சிறந்த
உயர்ந்த முனிவன் தங்கிய ஆச்சிரமத்தை; அருத்தி கூர - அன்பு மிக;
அணுகினன் - சேர்ந்தான்; அவன் - அப்பரத்துவாசன்; ஆண்டு -
அவ்விடத்தில்; விருத்தி வேதியரோடு - அறுதொழில் உடைய
அந்தணரோடு;  எதிர்மேவினான் - எதிர்கொண்டு வந்தான்.

     விருத்தி - தொழில். இங்கு ‘ஓதல், ஒதுவித்தல், வேட்டல், வேட்பித்தல்
ஈதல், ஏற்றல் என்ற ஆறும் ஆம்.’                                72