சுடர் கோயில்- நிலாவைப்போல ஒளி விளங்கும் அரண்மனைக்குள்; கொண்டு ஏகினார் - அழைத்துக்கொண்டு சென்றார்கள். நந்து என்னும் சொல் வளர்ச்சி, கேடு என்னும் இருபொருள் உடையது. - நந்தல் - கெடுதல் - நந்தினர் - வளர்ச்சிபெற்றார் எனப் பொருள் காண்க. ‘அறம் செய்து சுவர்க்கம் புக்கான்’ (தொல், சொல். சேனா. கிளவி. 58.) என்பவாதலின் இங்ஙனம் கூறினார். ‘ஆம்’ என்பதை அசை எனலும் ஆம். 8 2383. | நானம் நன்கு உரைத்தார்; நளிர் வானிடை ஆன கங்கை அரும் புனல் ஆட்டினார்; தான மாமணிக் கற்பகம் தாங்கிய ஊனம் இல் மலர் ஆடை உடுத்தினார். |
(அரம்பையர் மைந்தர்க்கு) நானம் - (கஸ்தூரி முதலியவற்றாலாய) வாசனைப்பொடியை; நன்கு உரைத்தார் - நன்றாக உடம்பில் பூசினர்; நளிர் வானிடை ஆன -குளிர்ந்த ஆகாயத்திடத்தில் உள்ள; கங்கை அரும்புனல் ஆட்டினார். கங்கைநதியின் அரிய நீரால் முழுக்காட்டி; தான மா மணிக் கற்பகம் - தேவருலகத்தில் உள்ளபெரிய அழகிய கற்பக மரங்கள்; தாங்கிய - சுமந்த; ஊனம் இல் மலர் ஆடை -குறைவு இல்லாத மலர்களால் ஆகிய ஆடையை; உடுத்தினார் - அணிவித்தார்கள். நானம் - கஸ்தூரி. இங்கு அதுமுதலாகிய, கூட்டுப் பொருளாகிய கண்ணம் குறித்தது. மலர் ஆடை -மலரே ஆடையாம்; பூத்தொழில் பொதிந்த ஆடையும் ஆம். தான - வண்மைக்குணம் உடைய (கற்பகம்)என உரைத்தலும் ஒன்று. 9 2384. | கொம்பின் நின்று நுடங்குறு கொள்கையார், செம்பொனின் கல ராசி திருத்தினார்; அம்பரத்தின் அரம்பையர், அன்பொடும், உம்பர்கோன் நுகர் இன் அமுது ஊட்டினார். |
கொம்பின்- பூங்கொம்பு போல; நின்று - வளைந்து நின்று; நுடங்குறு- ஒல்கிஅசைகின்ற; கொள்கையார் - பண்புடைய; அம்பரத்தின் அரம்பையர் - வானுலக அரம்பை மாதர்;(மைந்தர்க்கு) செம்பொனின் கல ராசி - செம்பொன்னால் ஆகிய அணிகளை; திருந்தினார் - நன்கு அணிவித்து; அன்பொடும் - பிரியத்தோடும்; உம்பர்கோன் நுகர் இன் அழுது - தேவேந்திரன் உண்ணக் கூடிய இனிய அமுத உணவினை; ஊட்டினார் - உண்பித்தார். கொம்பின் - ‘இன்’ உவம உருபு. கல ராசி - அணிகலன்களின் தொகுதி; பல்வேறு அணிகள்.இந்திரன் உண்ணும் அமுதத்தை இவ்வாடவர்களுக்கு அரம்பையர் ஊட்டினார் ஆம். உரைத்து, ஆட்டி, உடுத்தி, திருத்தி, அழுது ஊட்டினார் என்க. மேல் முடியும். 10 |