பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 669

     ‘கொன் பெற்ற - அச்சம் தருதலை உடைய; வெற்றிக் கொலை
பெற்ற
-தமக்கு வெற்றி உண்டாகும் கொலைத் தொழிலை உடைய;  கூர்
வேலோய்
- கூரிய வேற்படையைஉடைய தயரதனே; சொல்பெற்ற - புகழ்
உடைய; நோன்பின் துறையோன் -தவத்துறையில் சிறந்த கலைக்கோட்டு
முனிவனது; அருள் வேண்டி- கருணையை வேண்டிப்பெற்று; நல் பெற்ற
வேள்வி
- நல்ல புத்திர காமேஷ்டியோடு கூடிய பரிமேத வேள்வியை;
நவை நீங்க - பிள்ளை இல்லாக் குறை தீர; நீ இயற்றி - நீ செய்து;
என்பெற்று - என்னை மகனாகப் பெற்று; நீ பெற்றது - நீ  அடைந்த
பயன்தான்; இன்உயிர் போய் நீங்கலோ? - இனிய உயிர் போய் இறக்கப்
பெறுதல்தானோ?

     சொல் - புகழ். கலைக்கோட்டு முனிவரை அரிதின் கொண்டுவந்து
வேள்வி இயற்றி இராமனைப் பெற்றானாதலின் இங்ஙனம் கூறப்பெற்றான்.
மக்களைப் பெற்று மகிழ எண்ணியவன் அம்மக்களைப் பிரிந்த துன்பத்தாலே
உயிர் போகப் பெறுதலால் இரக்கம் பெரிதாயிற்று. தயரதன் இறப்புக்குத்
தானே காரணமானோம் என்று இராமன் இரங்கினன். கொன் - அச்சம்,
பெருமை எனப் பொருள்படும். உரிச்சொல் - இனி, கொல் பெற்ற எனில்
கொலையாம், பின்னரும் கொலைபெற்ற என வருதலின் அங்ஙனம் பிரித்தல்
ஏலாதாம். வேள்வியால் மக்கள் நால்வர் தயரதனுக்கு உளர் ஆயினும்
தயரதன் இறப்புக்கு இராமன் பிரிவு ஒன்றே காரணம் ஆதலின்
‘எனப்பெற்று’ என்று கூறியதாகக் கருதுக.                           61

2436.‘மன் உயிர்க்கு நல்கு
     உரிமை மண் பாரம் நான் சுமக்க,
பொன் உயிர்க்கும் தாரோய்!-
     பொறை உயிர்த்த ஆறு இதுவோ?
உன் உயிர்க்குக் கூற்றாய்
     உலகு ஆள உற்றேனோ?-
மின் உயிர்க்கும் தீ வாய்
     வெயில் உயிர்க்கும் வெள் வேலோய்!

     ‘பொன் உயிர்க்கும் தாரோய்! - பொன் மயமான தாதுக்களை
உதிர்க்கும் பூமாலையை அணிந்தவனே!; மின் உயிர்க்கும் - ஒளி வீசுகிற;
தீ வாய் -நெருப்பு சிந்தும் வாயினை உடைய; வெயில் விரிக்கும் -
சூரியன் ஒளி சிந்துகிற; வெள் - வெண்மையான; வேலோய்! - வேலை
உடைய தயரதனே; மன் உயிர்க்கு - நிலை பெற்ற எல்லா உயிர்களுக்கும்;
நல்கு உரிமை - அருள் செய்கிற உரிமையுடைய; மண் பாரம் - (உன்)
அரசாட்சி என்கிற சுமையை; நான் சுமக்க - நான்ஏற்றுக்கொள்ள;
பொறை - அப்பூமி பாரம்; (நீ நீங்கி) உயிர்த்த ஆறு இதுவோ?-
இளைப்பாறிய விதம் இது தானோ?; உன் உயிர்க்குக் கூற்றாய் - உன்
உயிர்க்குயமனாக; உலகு ஆள உற்றேனோ - உலகத்தை ஆளப்
பிறந்தேனோ?