வசிட்டன் இராமனை நோக்கிக் கூறுதல் | 2443. | மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து, சுற்றும் இருந்த அமைதியினில், துன்பு உழக்கும் கொற்றக் குரிசில் முகம் நோக்கி, கோ மலரோன் பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான். |
மற்றும் - மேலும்; வரற்பாலர் எல்லாரும் - வரவேண்டியவர்கள் எல்லாரும்; வந்து அடைந்து - வந்து சேர்ந்து; சுற்றும் இருந்த அமைதியினில் - இராமனைச் சுற்றி இருந்த பொழுதில்; துன்பு உழக்கும் கொற்றக் குரிசில் முகம் நோக்கி- துன்பத்தில் அழுந்திய வெற்றி நம்பியாகிய இராமனது முகத்தைப் பார்த்து; கோமலரோன் - பெருமையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரம தேவன்; பெற்ற - புதல்வன் ஆன; பெருமைத் தவ முனிவன் - பெருமையுடைய தவ முனிவனாகிய வசிட்டம்; பேசுவான் -. பிரமனது நகத்திற் பிறந்தவன் வசிட்டன் என்னும் பாகவதம். ‘வதிட்டன் தேற்றினான்’ என முன்னர்க் (2441.) கூறியது தொகை. இது விரி. இனி விரிவாக வதிட்டன் தேற்றுதலைக் கூறுவார். 69 கலிவிருத்தம் | 2444. | துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது புறத்து ஒரு துணை இலை, பொருந்தும் மன்னுயிர்க்கு; “இறத்தலும் பிறத்தலும் இயற்கை” என்பதை மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ? |
‘மறைகளின் வரம்பு கண்ட நீ - வேதங்களின் எல்லையை அளவிட்டறிந்த நீ; பொருந்தும் மன்னுயிர்க்கு - (உலகத்திற்) பொருந்திய நிலைபெற்ற உயிர்களுக்கு; “இறத்தலும் பிறத்தலும் இயற்கை” - மரணம், சனனம் இரண்டும் இயல்பே; துறத்தலும்- துறவற நெறியில் சேர்தலும்; நல் அறத் துறையும் - அறத்தாற்றின் இல்வாழ்க்கைநடத்தலும்; அல்லது- அல்லாமல்; புறத்து - வெளியே; ஒரு துணை இல்லை- வேறு ஒரு துணையும் இல்லை; என்பதை - என்கின்ற செய்தியை; மறத்தியோ - மறந்துவிட்டாயோ. பிறத்தல் இறத்தல் இயற்கை ஆதலின், தயரதன் இறந்ததுபற்றி வருந்தல் வேண்டா. உயிர்க்குத் துணை அறவழியில் இல்லறம் ஆற்றல், அல்லது துறவறம் |