பக்கம் எண் :

680அயோத்தியா காண்டம்

     வசிட்டரும் வேந்தரும் நதிப்புனலில் சென்று நிற்க, இராமனும்
நீர்க்கடன் செய்யும் கிரியை முறைகளை நோக்கினானாம்.              80

2455.புக்கனன் புனலிடை, முழுகிப் போந்தனன்,
தக்க நல் மறையவன் சடங்கு காட்ட, தான்,
முக் கையின் நீர் விதி முறையின் ஈந்தனன் -
ஒக்க நின்று உயிர்தொறும் உணர்வு நல்குவான்.

     உயிர்தொரும் - எல்லா உயிர்களிடத்தும்; ஒக்க நின்று - ஒரு
தன்மையாகஉள்ளிருந்து; உணர்வு நல்குவான் - அவற்றிற்கு உணரும்
தன்மையை அருளுபவனாகிய(பரம்பொருள்) இராமன்;  புனலிடை
புக்கனன்
- நதிநீரிற் புகுந்து; முழுகி -நீராடி; போந்தனன் - வெளியேறி;
தக்க நல் மறையவன் - சிறந்த நல்லவேதங்களை உணர்ந்தவனாகிய
வசிட்டன்; சடங்கு காட்ட - செய்ய வேண்டிய சிறந்தகிரியைகளை
வழிப்படுத்த; தான்-; முக்கையின் நீர் - கையினால் மூன்றுமுறை முகந்து
எடுத்துவிடும் தருப்பண நீரை; விதிமுறையின் - நூல்களில் விதித்த
முறைப்படி;  ஈந்தனன் - (தன் தந்தையை நினைத்து) கொடுத்தான்.

     எல்லா உயிர்களுக்கும் உள்ளுறைந்து உணர்வு தரும் பரம்பொருள்,
இராமன் என இப்போது மானுட வேடத்தில் வந்தான் ஆதலின்
அதற்கேற்ப வேதவிதிப்படி சடங்குகள் காட்டத் தருப்பணம் செய்த
தந்தையை வழிபட்டான் என்பதாம்.                               81

2456.ஆனவன் பிற உள யாவும் ஆற்றி, பின்,
மான மந்திரத்தவர், மன்னர், மா தவர்
ஏனையர் பிறர்களும், சுற்ற ஏகினன்;
சானகி இருந்த அச் சாலை எய்தினான்.

     ஆனவன் - தருப்பணம் செய்தவனான இராமன்;  பிறஉளயாவும்
ஆற்றி
- வேறுபிண்டம் அளித்தல் முதலாக உள்ள சடங்குகளையும் செய்து
முடித்து; பின் - பிறகு; மான மந்திரத்தவர் - பெருமை  படைத்த
மந்திரிகளும்; மன்னர் - அரசரும்; மா தவர் - பெரிய முனிவர்களும்;
ஏனையர் பிறர்களும் - மற்றும் உள்ளவர்களும்; சுற்ற- தன்னைச் சுற்றிவர;
ஏகினன் - சென்று; சானகி இருந்த அச்சாலை- சீதா பிராட்டி இருந்த
அந்தக் குடிலை; எய்தினான் - அடைந்தான்.

     ‘பிற உள’ என்பது  நீர்க்கடன் செய்த பின்னர்அளிக்கப்படுவதாகிய
பிண்டம் முதலியவற்றைக் குறிக்கும். இராமன் தயரதனின் மூத்த மகனாதலின்
இறந்த முதல் நாள் தொட்டுப் பதின்மூன்றாம் நாள்வரை செய்யத் தகும்
கருமங்கள் அனைத்தும்செய்ய வேண்டியவனாவான் என்பதுபற்றி இவ்வாறு
கூறினார்.