பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 685

2465.தாயரும் தலைப்பெய்து தாம் தழீஇ,
ஒய்வு இல் துன்பினால் உரறல் ஓங்கினார்;
ஆய சேனையும், அணங்கனார்களும்,
தீயில் வீழ்ந்து தீ மெழுகின் தேம்பினார்.

     தாயரும் - தாய்மார்களும்; தலைப்பெய்து - ஒன்று சேர்ந்து;  தாம்
தழீஇ
- தாங்கள் இராமனைத் தழுவிக்கொண்டு; ஓய்வு இல் துன்பினால் -
ஒழிதல்இல்லாத துக்கத்தோடு; உரறல் ஓங்கினார் - கதறத் தொடங்கினார்;
ஆய சேனையும்- உடன் வந்த சேனைகளும்; அணங்கனார்களும் -
பெண்களும்;  தீயில் வீழ்ந்து தீமெழுகின் - தீயின் விழுந்து தீகின்ற
மெழுகு போல;  தேம்பினார் - மனம் உருகிஅழுதார்கள்.

     தீ மெழுகு - வினைத்தொகை உரறல் - கதறல், பேரொலி செய்தலாம்.
உரறு - பகுதி. துயரில் கைகேயியும் இணைந்தது காண்க.              91

தாயர், சானகியைத் தழுவிக்கொண்டு வருந்துதல்  

2466.பின்னர் வீரரைப் பெற்ற பெற்றி அப்
பொன் அனார்களும், சனகன் பூவையைத்
துன்னி, மார்பு உறத் தொடர்ந்து புல்லினார்;
இன்னல் வேலை புக்கு இழிந்து அழுந்துவார்.

     பின்னர் - பிறது;  வீரரைப் பெற்ற பெற்றி அப்பொன்
அனார்களும்
-இராமன் முதலிய நால்வரையும் பெற்ற தன்மையுடைய
அந்தப் பொன்போன்ற அரசமாதேவியர் மூவரும்; சனகன் பூவையை -
சனகன் மகளாகிய சானகியை; துன்னி - நெருங்கி; மார்புஉறத்தொடர்ந்து
புல்லினார்
- பற்றிக்கொண்டு மார்பிற் கட்டியணைத்து;  இன்னல் வேலை
புக்கு
- துன்பக் கடலிற் புகுந்து;  இழிந்து - உள்ளே இறங்கி;
அழுந்துவார்- அமிழ்பவராக ஆனார்கள்.

     சனகன் மகள் சானகி, பூவை - உவமவாகுபெயர். பொன் போன்றார் -
தேவியர்; போற்றிப் பாதுகாக்கப்படுபவர் என்னும் பொருளில், தழுவிய
அளவில் துயரம் மீக்கூர்ந்தபடியை இவ்வாறு உரைத்தார்.              92

யாவரும் இராமனை வந்து அடைதல்  

2467.சேனை வீரரும், திரு நல் மா நகர்
மான மாந்தரும், மற்றுளோர்களும்,
ஏனை வேந்தரும், பிறரும், யாவரும்,-
கோனை எய்தினார் - குறையும் சிந்தையார்.