பக்கம் எண் :

திருவடி சூட்டு படலம் 687

     அன்று தீர்ந்தபின் - அன்றையநாள் கழிந்தபிறகு (மறுநாள்); அரச
வேலையும்
- அரசர் கூட்டமும்; துன்று செஞ்சடைத் தவரும்- நெருங்கிய
சிவந்த சடையினை உடையமுனிவர்களும்; சுற்றமும் - சுற்றத்தினரும்;
தன் துணைத் திருத் தம்பிமார்களும்- தன்னுடைய இணைபிரியாத சீரிய
இளவல்களும்; சென்று சூழ - சென்று சற்றிலும் இருக்க; ஆண்டு இருந்த -
அங்கே வீற்றிருந்த; செம்மல்- தலைமையோனாய இராமன்...(மேல் முடியும்)

     அரச வேலை - அரசர் வேலை. ஈறுகெட்டது. வேலை - கடல்
என்பது ஈண்டுக் கூட்டத்தை உணர்த்தியது. உருவகம். மூவரையும் ஒருசேரத்
தம்பிமார்கள் என்றார். செம்மல்தான் ‘பரிந்து கூறினான்’ (2470) என
முடியும்.                                                      95

2470. ‘வரதன் துஞ்சினான்; வையம் ஆணையால்,
சரதன் நின்னதே; மகுடம் தாங்கலாய்,
விரத வேடம், நீ என்கொல் வேண்டுவான்?
பரத! கூறு’ எனாப் பரிந்து கூறினான்.

     ‘பரத!-; வரதன் துஞ்சினான் - மேலானவனாய தயரதன் இறந்தான்;
வையம்- நிலவுலகம்;ஆணையால் - (அவனது ) கட்டளையால்;சரதம் -
உண்மையாக;நின்னதே - நின்னுடையதே; (அவ்வாறிருக்க) நீ மகுடம்
தாங்கலாய்
- நீ மணிமுடிசூடாமல்; விரத வேடம் - தவ வேடத்தை;
வேண்டுவான் - விரும்பி அணிந்தது; என்கொல்? - எதனால்’; கூறு’ -
சொல்வாய்; எனா - என்று; பரிந்து - அன்பு கொண்டு; கூறினான் -
கேட்டு மொழிந்தான்.

     வரதன் - வேண்டுவார்க்கு வேண்டுவன கொடுப்பவன் எனலும் ஆம்.
“ஈந்தே கடந்தான் இரப்போர்க் கடல்” (172.) என்றார் முன்னும்.
வேண்டுவான் எதிர்கால வினையெச்சம்; இங்குத் தொழிற்பெயர்த்
தன்மையாய் வந்தது. ‘வேண்டுதல் என் சொல்’ என உரைக்க.           96

பரதன் தன் கருத்தை விளக்கி உரைத்தல்  

2471.என்றலும், பதைத்து எழுந்து, கைதொழா
நின்று, தோன்றலை நெடிது நோக்கி, ‘ நீ
அன்றி யாவரே அறத்து உளோர்? அதில்
பின்றுவாய் கொலாம்?’ என்னப் பேசுவான்;

     என்றலும் - என்று இராமன் கேட்டவளவில் (பரதன்); பதைத்து -
துடித்து; எழுந்து -; கை தொழா நின்று - கைகூப்பி வணங்கி;
தோன்றலை நெடிது நோக்கி - இராமனை நெடுநேரம் பார்த்து; நீ
அன்றி
- நீ யல்லாமல்; அறத்து  உளோர்- தருமவழியில் பிறழாமல்
நிற்பார்;  யாவர் - யார் இருக்கிறார்கள்; அதில் - அவ்வறவழியில்;