பக்கம் எண் :

708அயோத்தியா காண்டம்

2512.பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான்;
மண்டு நீர் நெடு நகர் மாந்தர் போயினார்;
விண்டு உறை தேவரும் விலகிப் போயினார்;
கொண்டல்தன் ஆணையால் குகனும் போயினான்.

     பண்டை நூல் தெரி பரத்துவனும் போயினான் - பழமையான
வேதங்களை ஆராய்தறிந்தபரத்துவாச முனிவனும் (தன்னிடத்திற்குச்
சென்றான்; மண்டு நீர் நெடுநகர் மாந்தர்போயினார் - நிறைந்த அகழி
நீராற் சூழப்பெற்ற பெரிய அயோத்தி நகரவாசிகளாயமணிதர்களும்
புறப்பட்டுச் சென்றார்கள்; விண்டு உறை தேவரும் விலகிப் போயினார் -
வெளிப்பட்டு விண்ணிற் கூடிய தேவர்களும் அங்கிருந்து  நீங்கித் தத்தம்
இடம் சேர்ந்தார்கள்;கொண்டல்தன் - இராமபிரானது; ஆணையால் -
கட்டளையால்; குகனும்போயினான் - குகனும் தன் இடமாகிய சிருங்கி
பேரத்துக்குச் சென்றான்.

     குகன் சற்றுப் பின்தங்கி இராமனது ஆணை பெற்றுச்சென்றானாதல்
வேண்டும். விண்டு - வெளிப்பட்டு. மறைந்துள்ள தேவர்கள், தம்
காரியசித்திக்காக இராமனை அயோத்தி செல்லவொட்டாது தடுக்க
வெளிப்பட்டுக் கூடினார் ஆதலின்‘விண்டு உரை தேவர்’என்று கூறினார். 138

இராமன் பாதுகை ஆட்சி நடத்தப் பரதன் நந்தியம் பதியிடை வதிதல்

2513.பாதுகம் தலைக்கொடு, பரதன் பைம் புனல்
மோது கங்கையின் கரை கடந்து முந்தினான்;
போது உகும் கடி பொழில் அயோத்தி புக்கிலன்;
ஒது கங்குலில் நெடிது உறக்கம் நீங்கினான்.

     பரதன் -; பாதுகம் தலைக்கொடு - இராமனது திருவடி நிலையைச்
சிரமேற் கொண்டு;பைம்புனல் மோது கங்கையின் கரை கடந்து - (பசிய)
குளிர்ந்த நீர் மோதுகின்றகங்கையின் கரைகளைக் கடந்து; முந்தினான் -
முற்பட்டு; போது உகும் கடிபொழில்அயோத்தி புக்கிலன் - மலர்கள்
சிந்துகிற மணம் வீசும் சோலை சூழ்ந்த அயோத்திநகருக்குள் நுழையாமல்;
ஓது கங்குலின் - சொல்லப்படுகிற இரவில்; நெடிது உறக்கம் நீங்கினான்-
மிகவும் தூக்கம் ஒழிந்து... (மேல் முடியும்)

    முற்சென்ற பரதன் அயோத்திக்குள் செல்லவில்லை என்றார்.      139

2514.நந்தியம் பதியிடை, நாதன் பாதுகம்
செந் தனிக் கோல் முறை செலுத்த, சிந்தையான்
இந்தியங்களை அவித்து இருத்தல் மேயினான்,
அந்தியும் பகலும் நீர் அறாத கண்ணினான்.