பக்கம் எண் :

102ஆரணிய காண்டம்

2678.வேதியர்கள் வேத மொழி
     வேறு பல கூற,
காதல் மிக நின்று, எழில்
     கமண்டலுவின் நல் நீர்
மா தவர்கள் வீசி, நெடு மா
     மலர்கள் தூவ,
போது மணம் நாறு குளிர் சோலை
     கொடு புக்கான்.

    வேதியர்கள் வேதமொழி வேறுபல கூற - அந்தணர்கள் பல்வேறு
வகைப்பட்ட வேத வாக்கியங்களைச் சொல்ல; காதல் மிக நின்று எழில்
கமண்டலுவின் நல்நீர் மாதவர்கள் வீசி -
அன்பு மிகுதலால் சூழ்ந்து
நின்று அழகிய கமண்டலங்களிலுள்ள நல்ல நீரை மிக்க தவமுடையவர்கள்
தெளித்து; நெடுமாமலர்கள் தூவ - அழகிய பெரிய மலர்களை மேலே
சொரிய, (அகத்தியர் இராமனை); போது மணம் நாறு குளிர் சோலை
கொடு புக்கான் -
மலர்கள் மணம் வீசும் குளிர்ந்த சோலைக்குள்
அழைத்துக் கொண்டு போனார்.

     வேதமந்திரங்களைக் கூறி நன்னீர் தெளித்து மலர் தூவல் அம்முனிவர்
செய்யும் உபசார வகை. கமண்டலு - கமண்டலம். குண்டிகை கரசும் எனவும்
வழங்கப்பெறும். போது என்பது அப்பொழுது மலரும் நிலையில்
உள்ளமலர்.                                                  48

2679. பொருந்த, அமலன் பொழிலகத்து
     இனிது புக்கான்;
விருந்து அவன் அமைத்தபின்,
     விரும்பினன்; 'விரும்பி,
இருந் தவம் இழைத்த எனது இல்லிடையில்
     வந்து, என்
அருந் தவம் முடித்தனை; அருட்கு
     அரச!' என்றான்.

    அமலன் பொழிலகத்து(ப்) பொருந்த இனிது புக்கான் - இராமன்
சோலைக்குள் மனம் ஏற்றிட இனிமையாய்ப் புகுந்தவனாய்; அவன் விருந்து
அமைத்தபின் விரும்பினன் -
அம்முனிவர் விருந்திட்டு உபசரித்த பின்
மகிழ்ந்திருந்தான்; விரும்பி(அப்போது அகத்தியர்) மகிழ்ந்து
(இராமனைப்பார்த்து); அருட்கு அரச - கருணைக்குத் தலைவனே!;
இருநீதவம் இழைத்த எனது இல்லிடையில் வந்து மிக்க தவத்தைச் செய்த
என்னுடைய வீட்டில் எழுந்தருளி; என் அருந்தவம் முடித்தனை
என்றான் -
என்னுடைய அரிய தவத்தை நிறைவேற்றினாய் என்று கூறினார்.