பக்கம் எண் :

சடாயு காண் படலம் 111

 தொடர்ந்தன, துவன்றின;
     சூழல் யாவையும்
கடந்தனர்; கண்டனர்
     கழுகின் வேந்தையே.

    (இராமன் முதலிய மூவரும்) காவதம் பலவும் நடந்தனர் - பல காத
வழியும் நடந்தவர்களாய்;கிடந்தன நல் நதி - இடையே ஓடும் சிறந்த
ஆறுகளையும்; நின்றன கேண்மையின் தொடர்ந்தன கிரிகள் -
ஆங்காங்கே நிலைபெற்றனவாயும் உறவுள்ளன போலத்
தொடர்ச்சியாகவுள்ளனவுமான மலைகளும்; துவன்றின - நெருங்கியிருந்தன;
சூழல் யாவையும் கடந்தனர் - இத்தகைய மலைகள் சூழ்ந்திருந்த
காடுகளையும் தாண்டிச் சென்றனர்; கழுகின் வேந்தை(க்) கண்டனர் -
சடாயு எனும் கழுகரசனைப் பார்த்தனர்; ஏ - அசை.

     காவதம் - காதம். கிடந்தன - படுத்திருந்தன எனக் கூறும் வகையில்
நீண்டு விளங்கின என்றும் உரைப்பர். நின்றன என்பது தனித் தனியாய்
இருந்த மலைகள். தொடர்ந்தன என்பது மலைத் தொடர்ச்சிகள். நல்நதி -
புண்ணிய ஆறுகள் என்றும் ஆம்.                                 1

2691. உருக்கிய சுவணம் ஒத்து, உதயத்து
     உச்சி சேர்
அருக்கன் இவ் அகல் இடத்து
     அலங்கு திக்கு எல்லாம்
தெரிப்புறு செறி சுடர்ச்
     சிகையினால் சிறை
விரித்து இருந்தனன் என,
     விளங்குவான் தனை,

    உருக்கிய சுவணம் ஒத்து - தீயில் காய்ச்சி உருக்கப் பெற்ற
பொன்னைப் போன்றுள்ள; உதயத்து உச்சிசேர் அருக்கன் -உதயகிரியின்
சிகரத்தைச் சேர்ந்த இளஞ்சூரியன்; இவ் அகல் இடத்து அலங்கு திக்கு
எல்லாம் -
இந்த அகன்ற உலகில் பொருந்திய எல்லாத் திசைகளையும்;
தெரிப்புறு செறி சுடர்ச் சிகையினால் - விளங்கச் செய்யும் அடர்ந்த தன்
ஒளிக் கீற்றுக்களால்; சிறை விரித்து இருந்தனன் என - சிறகுகளை எங்கும்
விரித்துக் கொண்டு இருந்தான் என்று சொல்லும்படி, விளங்குவான் தனை -
விளங்கும் சடாயுவை,

     உதயகிரிக்கு உருக்கிய பொன் உவமை. உருக்கிய பொன் ஒத்து
விளங்குவான் எனவும் உரைப்பர். சடாயுவுக்கு இளங்கதிரவனும் அவன்
விரித்த சிறகுகளுக்குக் கதிர்களும் உவமை. சடாயு தன் சிறகுகளை விரித்து
ஒரு மலை உச்சியில் தங்கியிருந்த காட்சியை இவ்வாறு காட்டுவார் கவிஞர்.
சடாயுவின் நிறம் பொன்னிறம் என்பது இக்கவியால் அறியலாம். வடமொழியில்
அம்மலைக்கு உதயம் என்றே பெயர்.                               2