| வரைத் தடந் தோள் இணை வலியவோ?' என்றான். |
உரைத்தலும் - என்று அவர்கள் சொன்னதும்; பொங்கிய உவகை வேலையன் - கிளர்ந்த மகிழ்ச்சியாம் கடல் போன்றவரான அச் சடாயு; தரைத் தலை இழிந்து அவர்த் தழுவு காதலன் - அம்மலை உச்சியிலிருந்து பூமியில் இறங்கி வந்து அவர்களைத் தழுவிக் கொள்ளும் அன்புடைவனாய்; விரைத் தடந்தாரினான் - மணம் பொருந்திய பெரியமாலை அணிந்தவனான; வேந்தர் வேந்தன் தன் - அரசர்க்கரசனான தயரதனின்; வரைத் தடந்தோள் இணை வலியவோ என்றான் - மலை போல அகன்று விளங்கும் தோளிரண்டும் வலியனவாக உள்ளனவா எனக் கேட்டார். தயரதன் மைந்தர் எனக் கேட்டதும் சடாயு தன் நண்பனின் இனிய வாழ்வு பற்றி வினவினார் என்க. அரசர் எனும் முறையால் 'தோள் இணை வலியவோ' என்று கேட்டார். பகைவர்களை அழித்து, உலகைப் பாதுகாக்கும் பொறுப்பை ஏந்தியவை அரசர்களின் தோள்களாம். 'வரை தடந்தாரினிர்' எனக் கொண்டு இராமலக்குவரை விளித்தாகக் கொள்வதுமுண்டு. 18 தயரதன் மறைவுகேட்டு, சடாயு அரற்றல் 2708. | 'மறக்க முற்றாத தன் வாய்மை காத்து அவன் துறக்கம் உற்றான்' என, இராமன் சொல்லலும், இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான்; உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான். |
அவன் மறக்க முற்றாத தன் வாய்மை காத்து துறக்கம் உற்றான் - தயரதன் மறக்கக் கூடாததான தமக்குரிய சத்தியத்தைப் பாதுகாத்துச் சுவர்க்கம் அடைந்தார்; என இராமன் சொல்லலும் - என்று இராமன் கூறியதும்; இறக்கம் உற்றான் என ஏக்கம் எய்தினான் - தயரதன் மரணமடைந்தான் எனப் பெரிய ஏமாற்றம் அடைந்து; உறக்கம் உற்றான் என உணர்வு நீங்கினான் - தூக்கத்தில் ஆழ்ந்தவன் போல அறிவு நீங்கப் பெற்றார். தயரதன் இறந்ததைக் காரணத்தோடு இராமன் கூறியதும் சடாயு பெருந் துன்பமுற்று அறிவுணர்வு சோர்ந்தார் என்பதாம். தயரதன் வாய்மை காத்து அதனால் உயிர் துறந்தார் என்பதை 'மெய் விடக் கருதாது விண் ஏறினான்' எனச் சடாயு பின்னர்க் கூறுவதாலும் (2717) வாலி வதைப் படலத்தில் வாலி தயரதனை 'வாய்மையும் மரபும் காத்து மன்னுயிர் துறந்த வள்ளல்' (4018) எனக் கூறுவதாலும் தயரதன் வாய்மை காத்த நிலை நன்கு புலனாகும். |