எனக்கும் உரிய இறுதிக் கடன்களைச் செய்தருள்வீர்; உடல் இரண்டுக்கும் உயிர் ஒன்று ஆனான் பிரியவும் - இரண்டு உடல்களுக்கும் ஓருயிர் ஆன என் நண்பன் தயரதன் உயிர் பிரியவும்; தான் பிரியாதே இனிது இருக்கும் உடல் பொறை ஆம் - நான் மட்டும் இறவாமல் இனிதாக வாழ்ந்திருக்கும் என் உடலைச் சுமப்பது பெரும் சுமை ஆகும். பீழை பாராது - துன்பம் தருவதைப் பார்க்காமல்; எரி அதனில் இன்றே புக்கு இறவேனேல் - தீயில் இப்போதே இறங்கிச் சாகாவிட்டால்; இத்துயரம் மறவேன் என்றான் - இந்தத் துன்பத்தை மறக்க மாட்டேன் என்றார். குஞ்சுகளைத் தாய்ப் பறவை சிறகால் தழுவுவது இயற்கை. அதனால் இராமலக்குவரைச் சடாயு தம் சிறகுக்கரங்களால் அணைத்துக் கொண்டார். நண்பரின் மக்களைத் தம் மக்கள் எனக் கொள்வதால் 'மக்காள்' எனச் சடாயு இராமலக்குவரை விளித்தார். 'வினையேன்' என்றது தம் நண்பனாம் தயரதனை இழந்த கொடிய வினையைக் குறித்தது. இது நண்பன் இறந்தது கேட்டுத் தாம் இறவாதிருக்கும் கொடிய நிலையையும் குறிக்கும். பிரிவின் கண் பீழை தருவது ஒன்றில் (குறள் 839) என்ற கருத்தின்படி 'பீழை பாராது' என்றார். எரியில் புக நினைந்தது சடாயுவின் பெரும் நட்புக் கிழமையை உணர்த்தும். வான்மீகத்தில் சடாயு இராமலக்குவரிடம் சீதைக்குக் காவலாக இருப்பேன் என அவர்கள் அவரை வணங்கிச் சீதைக்குக் காவலாக இருக்க வேண்டி பஞ்சவடி சேர்ந்தார் என உளது. 27 இராம-இலக்குவர் தடுத்து உரைத்தலும் சடாயு இணங்குதலும் கலி விருத்தம் | 2717. | உய்விடத்து உதவற்கு உரியானும், தன் மெய் விடக் கருதாது, விண் ஏறினான்; இவ் இடத்தினில், எம் பெருமாஅன்! எமைக் கைவிடின், பினை யார் களைகண் உளார்? | உய்விடத்து உதவற்கு உரியானும் - தீங்கிலிருந்து தப்ப வேண்டிய போது காப்பாற்றி உதவி அளித்தற்கு ஏற்றவனும்; தன் மெய்விடக் கருதாது விண் ஏறினான் - தன் வாய்மையைக் கைவிட எண்ணாமல் துறக்கம் புகுந்தான்; இவ்விடத்தினில் எம்பெருமாஅன் எமைக் கைவிடின் - இக்காட்டில் எங்கள் தலைவனே எங்களை விட்டு இறந்தால்; பினையார்களை கண் உளார் - பின்பு எங்களுக்கு எவர் பற்றுக் கோடாக உள்ளார்? (ஒருவரும் இல்லை). உய்விடத்து உதவற்குரியான் - தயரதன் மெய்விடக் கருதாது - தயரதன் தான் முன் கைகேயிக்கு அளித்த இருவரங்களைக் கொடுக்காவிடில் வாய்மை சிதையும். எனவே அதைக் கருதி வரங்களைக் கொடுத்து |