பக்கம் எண் :

சடாயு காண் படலம் 133

சிற்றவை மாதரால் வந்த செய்கை - (இராமனின் குறிப்பறிந்து)
இலக்குவனும் தன் சிற்றன்னையாம் கைகேயி எனும் பெண்ணால் உருவாகிய
செயல்களாம்; வரம்பு இலா ஓத வேலை ஒழிவு இன்று உணர்த்தினான் -
எல்லையற்ற ஒலியுடைய பெருங்கடல் போன்ற துன்ப நிகழ்ச்சிகளைச்
சிறிதும் விட்டுவிடாமல் சடாயுவுக்கு விளக்கமாகக் கூறினான்.

     சடாயுவைத் தாதை என்றது தங்கள் தந்தையாம் தயரதனின் நண்பன்
என்ற முறைமையால். சடாயுவும் இராமலக்குவரை இம்முறை பற்றியே
'மைந்தன்மீர்' (2713) என்றும் 'மக்காள்' (2716) என்றும் கூறினார்.
சடாயுவைத் தாதை என இக்காண்டத்தில் பல இடங்களில்
குறிப்பிடப்பட்டுள்ளது (2715, 3492). இராமன் இலக்குவனைச் சடாயுவிடம்
செய்திகளைக் கூறுமாறு குறிப்பால் நோக்கியது சிற்றன்னை கைகேயி மீது
தான் குற்றம் கூறுவதை விரும்பாமை ஆகும். இராமனின் குறிப்பை
இலக்குவன் அறியும் ஆற்றலுடையவன் என்பதை 'நோக்கினான்' என்பதால்
உணரலாம். சிறு+அவ்வை=சிற்றவை. அவ்வை - தாய் ஒலியை உடைய கடல்
போல ஒழிவின்று உணர்த்தினான் இலக்குவன் எனவும் உரைப்பர். கடல்
கரையை உடைவது. ஆனால் கைகேயினால் உண்டான துன்பம் கரை கடந்த
எல்லையற்ற துன்பம் என்பதை வரம்பிலா ஓத வேலை என்பதில் காணும்
'வரம்பிலா' என்ற சொல்லால் சுட்டப்பெறும்.                       33

சடாயு இராமனைப் போற்றுதல்

2723.'உந்தை உண்மையன் ஆக்கி,
     உன் சிற்றவை
தந்த சொல்லைத் தலைக்
     கொண்டு, தாரணி,
வந்த தம்பிக்கு
     உதவிய வள்ளலே!
எந்தை வல்லது யாவர்
     வல்லார்?' எனா,

    (அது கேட்ட சடாயு இராமனைப் பார்த்து) உந்தை உண்மையன்
ஆக்கி -
உன் தந்தையாம் தயரதனை வாய்மையாளன் என்று நிலை நாட்டி;
உன் சிற்றவை தந்த சொல்லைத் தலைக் கொண்டு - உன் சிறிய தாயாம்
கைகேயி கட்டளையைச் சிரமேல் கொண்டு, தாரணி வந்த தம்பிக்கு
உதவிய வள்ளலே -
உனக்கு உன் தந்தை அளித்த அரசுச் செல்வத்தை
உன்பின் பிறந்த தம்பியாம் பரதனுக்குக் கொடுத்த கொடையீற் சிறந்தவனே!;
எந்தை வல்லது யாவர் வல்லார் எனா - என் தந்தை போன்ற நீ
செய்ததைப் போல யார் உலகில் செய்யத் திறமை உள்ளவர் ஆவார்?
(ஒருவருமில்லை) எனக்கூறி,

     தந்தை தயரதனை வாய்மையாளன் என நிலைநாட்டித் தனக்குக்
கிடைத்த அரசைத் தன் தம்பிக்கு ஈந்த வள்ளன்மை கருதி 'வள்ளலே!' என