| அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான்; 'மன்னர் மன்னவன் மைந்த! இவ் வாணுதல் இன்னள் என்ன இயம்புதியால்' என்றான். |
பின்னரும் - பிறகும்; அப்பெரியவன் பெய் வளை அன்னம் அன்ன அணங்கினை நோக்கினான் - அப்பெரியோராம் சடாயு, அணிந்த வளையல்களையுடைய அன்னம் போன்ற தெய்வப் பெண்ணாம் சீதையைப் பார்த்தவராய்; மன்னர் மன்னவன் மைந்த - சக்ரவர்த்தி தயரதனின் மகனே!; இவ்வாணுதல் இன்னள் என்ன இயம்புதியால் என்றான் - இந்த ஒளி பொருந்திய நெற்றியை உடையவள் இன்னாள் என்று சொல்வாய் என்றார். பெரியவன் - பண்பு, கல்வி, வாழ்நாள் முதலியவற்றால் பெரியவர். பெய் வளை அன்னம் என்பது இல்பொருள் உவமை. அணங்கு - உருவகம். நோக்கினான் - முற்றெச்சம். வாள்+நுதல்=வாணுதல், ஒளிபொருந்திய நெற்றியை உடையவள்; அன்மொழித் தொகை. 36 2726. | அல் இறுத்தன தாடகை ஆதியா, வில் இறுத்தது இடை என, மேலைநாள் புல் இறுத்தது யாவும் புகன்று, தன் சொல் இறுத்தனன்- தோன்றல்பின் தோன்றினான். | தோன்றல் பின் தோன்றினான் - இராமனுக்குப் பின் பிறந்த தம்பியாம் இலக்குவன்; மேலைநாள் அல் இறுத்தன தாடகை ஆதியா - முன் நாளில், இருள் ஒரு வடிவு எடுத்து வந்தாற் போன்ற தாடகையைக் கொன்றது முதலாக; வில் இறுத்தது இடை என - சீதையை மணக்கச் சனகன் அவையில் வில்லை முறித்தது நடுவாக; புல் இறுத்தது யாவும் புகன்று - வனம் அடைந்து புல்லிற் படுத்தது ஈறாக எல்லாவற்றையும் கூறி; தன் சொல் இறுத்தனன் - தன்னுடைய வார்த்தையை முடித்தான். தாடகையுடன் கொன்றது என்ற சொல்லையும் 'புல் இறுத்தது' என்பதுடன் ஈறாக என்ற சொல்லையும் கூட்டுக. தோன்றல் - ஆடவரில் சிறந்தவன்; தலைவன். தாடகை - மலையில் திரிபவள். 'வில்லிறுத்தங்கு அரிவையை மேலை நாள் புல்லுறுத்து' எனப் பாடம் கொண்டு மிதிலையில் சிவ வில்லை முறித்து அங்குச் சீதையை மணந்து கொண்டு எனப் பொருள் |