அவர்களைக் கண்டதால் (2700) 'புரிதிர் மாதவம்' என்றார். தம் மக்கள் துயருறாமல் தந்தை காப்பது போல் அவர்கட்குச் சடாயு நிழல் தந்து நின்றார். 'விண் சென்றனன்' என்ற தொடர் காப்பிய வளர்ச்சியில் இக்கதை மாந்தர் இராவணனுடன் சீதையைக் காக்கப் போரிட்டு மடியும் நிலையைக் குறிப்பாக உணர்த்துகிறது எனலாம். 40 2730. | ஆய சூழல் அறிய உணர்த்திய தூய சிந்தை அத் தோம் இல் குணத்தினான் போய பின்னை, பொரு சிலை வீரரும் ஏய சோலை இனிது சென்று எய்தினார். | ஆய சூழல் அறிய உணர்த்திய - அத்தகைய பஞ்சவடி எனும் இடத்தை அறியும்படி தெரிவித்த; அத்தூய சிந்தை தோம்இல் குணத்தினான் - அந்தத் தூய்மையான மனமும் குற்றமற்ற நற்பண்புகளும் கொண்ட சடாயு; போய பின்னை - அவ்விடம் விட்டுச் சென்ற பின்னர்; பொரு சிலை வீரரும் ஏய சோலை இனிது சென்று எய்தினார் - போர் புரிதற்குரிய வில்லை உடைய வீரர்களாம் இராமலக்குவர் அங்கு அமைந்திருந்த சோலையை மகிழ்ந்து போய் அடைந்தனர். ஏய சோலை - அகத்தியர் அவர்களைத் தங்குமாறு கூறிய சோலை எனலுமாம். தூய சிந்தை தோமில் குணத்தை முன்னரே தூய்மையான (2694) என்ற பாடலில் உணர்த்தியுள்ளார் இத்தொடர் சடாயுவை நன்கு விளக்குதற்குரிய நயமுடையது. 41 2731. | வார்ப் பொற் கொங்கை மருகியை, மக்களை, ஏற்பச் சிந்தனையிட்டு,- அவ் அரக்கர்தம் சீர்ப்பைச் சிக்கறத் தேறினன்-சேக்கையில் பார்ப்பைப் பார்க்கும் பறவையின் பார்க்கின்றான். | அவ் வரக்கர் தம் சீர்ப்பைச் சிக்கறத் தேறினன் - அங்குள்ள அரக்கர்களது சிறப்பை ஐயமில்லாமல் நன்றாய் அறிந்த சடாயு; சிந்தனை இட்டு - ஆலோசித்து; வார் பொற் கொங்கை மருகியை மக்களை - |