துளிகள் எங்கும் பரவி வழிய; அழுவது ஒத்தது - புலம்பி அழுவதைப் போன்றிருந்தது; ஆல், மன், ஓ - என்பன அசைகள். அலங்குதல் - அசைந்தாடுதல் வழுஇலா வாய்மை என்பது தண்டகாரணிய முனிவர்களுக்கு, அவர்களை அரக்கரின் கொடுமையிலிருந்து விடுவிக்கக் கூறிய மொழிகளை நிறை வேற்ற நிற்பவர் எனலாம். மேலும், தம் தந்தை கைகேயிக்குக் கொடுத்த வரத்தின் மெய்ம்மையைக்காக்க வனம்புகுந்த மைந்தர் எனலும் பொருந்தும் கண்ணுக்குக் குவளை; முந்திய பாடலில் (2733) 'குவளை ஒண் கண்' எனக் கூறியதை நோக்குக. கண்பனி - கண்ணீர். பழுவம் என்பது காடு. இது ஆகுபெயராய்த் தொகுதியை உணர்த்திற்று. குவளைக்காடு எனலுமாம். பின்னர் 'எல்லி அம் குவளைக் கானத்து' (2737) எனவும் வருதல் காண்க. குவளை மலரில் தோன்றும் தேன் வழிவதைக் கண்ணீர் (கள்+நீர்) வடிப்பதாகக் கொள்வாரும் உளர். கோதாவரியைச் சேர்ந்த காலம் பனிக்காலத்திற்குச் சற்று முந்தியது. ஆதலால் பனி என்பதற்கு பனி நீர்த்துளி எனவும் கூறுவர். இரைத்து இரைத்து, ஏங்கி ஏங்கி எனும் அடுக்குகள் மிகுதி குறித்து நின்றன. உருவகமும், தற்குறிப்பேற்ற அணியும் இப்பாடலில் அமைந்துள்ளன. 3 இராமனும் சீதையும் இயற்கைக் காட்சிகளைக் கண்டு மகிழ்தல் 2735. | நாளம்கொள் நளினப் பள்ளி, நயனங்கள் அமைய, நேமி வாளங்கள் உறைவ கண்டு, மங்கைதன் கொங்கை நோக்கும், நீளம்கொள் நிலையோன்; மற்றை நேரிழை, நெடியநம்பி தோளின்கண் நயனம் வைத்தாள், சுடர்மணித் தடங்கள் கண்டாள். | நீளம் கொள் சிலையோன் - நீண்ட வில்லை உடைய இராமன்; நாளம் கொள் நளினப் பள்ளி - தண்டினைக் கொண்ட தாமரை மலராகிய படுக்கையில்; நயனங்கள் அமைய நேமி வாளங்கள் உறைவ கண்டு - கண்கள் மூடியிருக்கச் சக்கரவாகப் பறவைகள் தங்கியிருப்பதைப் பார்த்து; மங்கை தன் கொங்கை நோக்கும் - சீதையின் மார்பகங்களைப் பார்த்தான்; நேரிழை நெடியநம்பி தோளின்கண் நயனம் வைத்தாள் - தக்க அணிகலன்களை அணிந்த சீதை பெரியோனும் ஆண்களிற் சிறந்தவனுமான் இராமனின் தோளினைப் பார்த்தாள்; சுடர்மணித் தடங்கள் கண்டாள் - ஒளிவீசும் நீலமணியால் ஆகிய குன்றுகளை நோக்கினாள்; மற்று - வினை மாற்றுப் பொருளில் வந்து; ஐ - சாரியை. |