போதகம் - பத்தாண்டு நிறைந்த யானைக் கன்று. சீதையின் நடைக்கு அன்னம் தோற்றது என்பதை 'ஒதுங்க' என்ற சொல்லும் இராமன் நடைக்கு ஆண்யானை தோற்றதை 'மீளும்' என்ற சொல்லும் சுட்டும். கோலங் காண் படலத்தில் சீதை மண்டபத்தை நோக்கி நடந்தபோது 'அன்னமும் அரம்பையரும் ஆர் அமிழ்தும் நாணமன் அவை இருந்த மணி மண்டபம் அடைந்தாள்' (1144) என்பதை நினைவு கொள்ளலாம். அம்மண்டபத்தில் வில்லொடிக்க எழுந்த இராமன் நாகமும் நாண நடந்தான்' (697) என்பதையும் ஒப்பிடலாம். சென்ற பாடலில் புறப்பொருள்கள் உவமையாக அமைந்தன. இங்கு, புறப்பொருளின் செயல்களைத் தலைமக்களின் செயல்கள் வென்ற நிலையில் அமைவதைக் காணலாம். ஆடவர் செயலினும் மகளிர் செயல் அடங்கி நிற்பதைப் புதிய தோர் முறுவல் பூத்தாள்' என்பார். இதில் ஏதுத்தற்குறிப்பேற்ற அணி அமைந்துள்ளது. 5 2737. | வில் இயல் தடக் கை வீரன், வீங்கு நீர் ஆற்றின் பாங்கர், வல்லிகள் நுடங்கக் கண்டான், மங்கைதன் மருங்குல் நோக்க, எல்லிஅம் குவளைக் கானத்து, இடை இடை மலர்ந்து நின்ற அல்லிஅம் கமலம் கண்டாள், அண்ணல்தன் வடிவம் கண்டாள். |
வில்லியல் தடக்கை வீரன் - வில் வித்தையில் தேர்ச்சி பெற்ற நீண்ட கைகளை உடைய வீரனான இராமன்; வீங்கு நீர் ஆற்றின் பாங்கர் - மிகுந்த நீரையுடைய கோதாவரி நதியிடத்தே; வல்லிகள் நுடங்கக் கண்டான் - கொடிகள் அசைவதைப் பார்த்து; மங்கைதன் மருங்குல் நோக்க - சீதையின் (துவளும்) இடையைப் பார்க்க; (அச்சீதை) எல்லி அம் குவளைக் கானத்து இடை இடை - இருள் போல் கறுத்த அழகிய நீலமலர்த் தொகுதியின் நடுநடுவே; மலர்ந்து நின்ற அல்லி அம் கமலம் கண்டாள் - பூத்து விளங்கிய அகவிதழ்களை உடைய அழகிய தாமரை மலர்களைப் பார்த்து; அண்ணல் தன் வடிவம் கண்டாள் - இராமனின் (கரிய) திருமேனியை நோக்கினாள். வில் இயல் தடக்கை - வில் பொருந்திய வலிய கை எனவுமாம். எல்லி அம் குவளைக் கானத்து - இரவில் மலர்ந்து விளங்கும் அழகிய குவளைக் காட்டிடத்து என்றும் கூறுவர். குவளை இரவில் மலரும் மலர். இராமன் கொடியைக் கண்டு ஒப்புமையால் சீதையின் இடையை நினைத்தான். குவளை மலர்களின் இடையே மலர்ந்த தாமரை மலர்களைக் கண்டு |