பக்கம் எண் :

விராதன் வதைப் படலம் 17

 வசை இல் மேரு முதல் மால் வரைகள்
     ஏழின் வலி சால்
விசைய வார் சிலை இராமன் ஒரு
     வாளி விடவே

    அன்ன அயில் - அந்தச் சூலப்படை; திசையும் - எண் திசைகளும்;
வானவரும் - அவ்வெட்டுத்திசைக்காவல் செய் தேவரும்; திசைநின்ற
மாவும் -
அத்திக்குகளில் நின்ற எட்டுயானைகளும்; உலகும் -
உலகங்களும்; அசையும் - கலங்கக் காரணமான; ஆலம் என- ஒரு
நஞ்சென; மின்னிவரலும் - ஒளிவீசி வரவும்; இராமன், வசையில் மேரு
முதல்மால் வரைகள் ஏழின் வலி சால் -
குற்றமில்லாத மேரு முதலாக
உள்ள மலைகள் ஏழை விட வலிமைமிக்க; விசைய வார்சிலை - வெற்றித்
தரும் நீண்ட வில்லிலிருந்து; ஒருவாளி விட -ஓரம்பைத் தொடுத்து எய்ய:
ஏ - ஈற்றசை.

     திசையும் வானவரும் என்பதற்குத் திகைக்கும் தேவரும் எனவும்
பொருள்படும். எ.டு. ‘நீதிசைத்தது உண்டோ’ (1512) திசைவானவர் -
இந்திரன், அக்கினி, யமன், நிருதி, வருணன், வாயு,குபேரன், ஈசானன் என
எண்மர். எட்டுத்திக்கு யானைகள் ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம்,
அஞ்சனம், புட்பதந்தம், சாருவபௌமம், சுப்பிரதீபம் என்பன. மா -
விலங்கின் பொதுப் பெயர்.ஏழுமலைகளாவன: கயிலை, இமயம், மந்தரம்,
விந்தம், நிடதம், எமகூடம், நீலகிரி என்பன.விசயம் என்பது விசையம் என
எதுகை நோக்கித் திரிந்தது எனலாம். விசைய என்பதற்கு வேகமாகஎனவும்
பொருள் கூறுவர். ஒரு - ஒப்பற்ற எனவுமாம்.                       26

2543. ‘இற்றது இன்றொடு இவ் அரக்கர்
     குலம்’ என்று, பகலே,
வெற்ற விண்ணினிடைநின்று நெடு
     மீன் விழுவபோல்,
சுற்று அமைந்த சுடர் எஃகம்அது
     இரண்டு துணியா
அற்ற கண்டம்அவை ஆசையினது
     அந்தம் உறவே

    இவ்வரக்கர் குலம் இன்றொடு இற்றது - இந்த இராக்கதக் கூட்டம்
இந்த நாளோடு முடிந்தது; என்று - எனக் குறிபார்த்து; பகலேவெற்ற
விண்ணினிடை நின்று நெடு மீன் விழுவ போல் -
பகற்காலத்திலே
வேகமற்ற வெறும்வானத்திலிருந்து பெரிய விண்மீன்கள் வீழ்வன போல;
சுற்று அமைந்த சுடர் எஃகம் அது - சுற்றிலும் பொருந்திய ஒளியுடைய
சூலம்; இரண்டு துணியா - இரண்டு துண்டாக்கப்பட்டு; அற்ற கண்டம்
அவை -
அழிந்த அத்துண்டங்கள்; ஆசையினது அந்தம் உற -
திக்குகளின்எல்லையை அடைய; ஏ - ஈற்றசை.