பக்கம் எண் :

208ஆரணிய காண்டம்

     திருமால் போன்ற இவன் அருகில் இருப்பவள் திருமகளே எனச்
சூர்ப்பணகை நினைக்கிறாள். இதனால் அவன் தன்னை விரும்பான் என்பது
குறிப்பு. 'மாண்ட கற்புடையாள்' என்பதற்கு அழிந்த கற்புடையவள் எனப்
பொருள் கூறிச் சூர்ப்பணகையை இத் தொடர் குறிக்கும் என்பர். இதற்குச்
சான்றாக முன்னர் வந்த தேயும் 'கற்பினாள்' (2757) என்ற தொடரைக்
காட்டுவர். இராமனை உரு வெளித் தோற்றமாகச் சூர்ப்பணகை மீண்டும்
மீண்டும் காண்பதால் 'ஈண்டு' என்றாள். பன்னிரண்டடிகள் காமத்தியல்பு
கூறுகின்றன. இதனால் சூர்ப்பணகையின் காம நோய் நன்கு புலப்படும்.

     இது பொதுப் பொருளால் சிறப்புப் பொருளை விளக்குவதால் பிறிது
மொழிதல் எனும் அணியாம்.

     (இப்பாடல் சிறந்த சுவடிகளிலும் சிறந்த அச்சுப்படிகளிலும் இல்லை.
எனவே இதனை மிகைப் பாடலாகக் கொள்வர்.)                    88

2820. ஆன்ற காதல் அஃது
     உற எய்துழி,
மூன்று உலோகமும் மூடும்
     அரக்கர் ஆம்
ஏன்ற கார் இருள்
     நீக்க இராகவன்
தோன்றினான் என,
     வெய்யவன் தோன்றினான்.

    ஆன்ற காதல் அஃது உற எய்துழி - மிகுந்த காதலாம் அத்
துன்பத்தைச் சூர்ப்பணகை பெரிதும் அடைந்து வருந்தும் போது; மூன்று
உலோகமும் மூடும் அரக்கர் ஆம் -
வானுலகு, பூமி, பாதலம் எனும்
மூன்று உலகங்களையும் மூடி விடக் கூடிய வலிமை படைத்த இராக்கதர்
ஆகிய; ஏன்ற கார் இருள் நீக்க - எதிர்ப்படும் கரிய இருட்டைப் போக்க;
இராகவன் தோன்றினான் என வெய்யவன் தோன்றினான் - இராமன்
அவதரித்தது போலச் சூரியன் உதயம் ஆனான்.

     சூர்ப்பணகை பட்ட காம வேதனையை 2803 முதல் இது வரையுள்ள
18 பாடல்கள் விரித்துரைக்கின்றன. இருளுக்கு அரக்கர்களும் அதைப்
போக்கும் கதிரவனுக்கு இராமனும் உவமை ஆம். சூர்ப்பணகை பட்ட
துன்பத்தை அரக்க நிலைக்கு ஏற்பக் கூறியது எண்ணத்தக்கது. மிதிலைக்
காட்சிப் படலத்தில் சீதை கொண்ட காதல் நோயை (519-539) ஒப்பிட்டுக்
காணின் இவ்வேறுபாடு நன்கு புலனாகும். இப்பாடலுடன் சூர்ப்பணகைப்
படலம் முடிந்ததாகவும் அடுத்த பாடல் முதல் மூக்கரி படலம்
தொடங்குவதாகவும் சில சுவடிகளில் உள்ளன.                      89

சீதையைத் தூக்கிச் செல்லச் சூர்ப்பணகை முயலுதல்

2821.விடியல் காண்டலின், ஈண்டு, தன்
     உயிர் கண்ட வெய்யாள்,