பக்கம் எண் :

விராதன் வதைப் படலம் 21

2549.எரியின் வார் கணை இராமன் விட,
     எங்கும் நிலையாது
உருவி ஓட மறம் ஓடுதல்
     செயா உணர்வினான்,
அருவி பாயும் வரைபோல் குருதி
     ஆறு பெருகிச்
சொரிய, வேக வலி கெட்டு,
     உணர்வு சோர்வுறுதலும்

    இராமன் எரியின் வார்கணை விட - இராமபிரான் நெருப்புப்
போன்ற நீண்ட அம்புகளை எய்ய; எங்கும் நிலையாது உருவி ஓட -
எவ்விடத்தும் தடைப்படாமல் அரக்கன் உடலில் அவ்வம்புகள் ஊடுருவிச்
செல்ல; மறம் ஓடுதல்செயா உணர்வினான் - கொடுமை நீங்கா
அறிவுடைய அவ்வரக்கன்; அருவி பாயும் வரை போல்- அருவிகள்
பாய்ந்து ஓடும் மலை போல; குருதி ஆறு பெருகிச் சொரிய - இரத்த
ஆறுபோலத் தன் உடம்பிலிருந்து பெருக்கெடுத்து வழிய; வேக வலி
கெட்டு உணர்வு சோர்வுறுதலும் -
மிகுந்த வலிமை அழிந்து அறிவிழந்த
அளவில்.

     எரியின் வார்கணை அக்கினி யாத்திரமும் ஆகும். எரிக்க வேண்டிய
அவ்வம்பு விராதனின் வரவலிமையால் அவனை எரிக்காமல் ஊடுருவியது
என்பர். விராதனுக்கு மலையும் அவன் உடலிலிருந்துபெருகும் இரத்தத்திற்கு
அருவியும் முறையே உவமையாம். குருதி ஆறு - உருவகம்.            33

இராமலக்குவர் விராதன் தோள்மேல் ஏறி வெட்டி வீழ்த்தல்

2550.மெய் வரத்தினன், ‘மிடல்-
     படை விடப் படுகிலன்;
செய்யும் மற்றும் இகல்’ என்று
     சின வாள் உருவி, ‘வன்
கை துணித்தும்’ என, முந்து கடுகி,
     படர் புயத்து,
எய்வு இல் மல் பொருவு தோள் இருவர்
     ஏற, நிருதன்

    எய்வு இல் மல் பொருவு தோள் இருவர் - சோர்வில்லாத, மற்போர்
செய்வதில் வல்ல தோள்களை உடைய இராமலக்குவர்; மெய்வரத்தினன் -
அழியாவரம் பெற்ற விராதன்; மிடல் படை விடப் படுகிலன் - வலிய
அம்புகளை எய்தும் இறவான்; மற்றும் இகல் செய்யும் - மேலும் இவன்
போர்புரிவான்; என்று சினவாள் உருவி - எனக்கருதிக் கோபத்தோடு
வாள்களை உருவி; வன்கை துணித்தும் என - (அரக்கனின்) வலிய