பக்கம் எண் :

218ஆரணிய காண்டம்

     புலிதானே புறத்தது ஆகக்குட்டி கோட்படாது என்ற பழமொழியைப்
புறநானூற்றில் உள்ள 'புலி புறங்காக்கும் குருளை போல' (புறம். 42.10) என்ற
அடியோடு ஒப்பிடத்தக்கது. 'குட்டியைத் தின்னலாமே கோட்புலி புறத்ததாக'
எனவரும் சிந்தாமணி (1134) அடியும் இதனை விளக்கும் 'வலியானே! யான்
பட்ட வலி காணவாராய்' என்பதில் உள்ள சொல் பின்வரு நயம் எண்ணி
மகிழ்தற்குரியது. தானவர் என்பவர்கள் தனு என்பவளுக்குக் காசிபரிடம்
பிறந்த அசுரர் என்பர்.

     உலகு - இடவாகுபெயர். இதில் பிறிது மொழிதல் அணி உளது. உலக
உண்மை மொழி தன்னிலையால் பொய்த்து விட்டதே எனச் சூர்ப்பணகை
கூறியது குறிப்புமொழியாம்.                                     102

2834.'ஆர்த்து, ஆணைக்கு-அரசு உந்தி, அமரர்
     கணத்தொடும் அடர்ந்த
போர்த் தானை இந்திரனைப் பொருது,
     அவனைப் போர் தொலைத்து,
வேர்த்தானை, உயிர் கொண்டு
     மீண்டானை, வெரிந் பண்டு
பார்த்தானே! யான் பட்ட
     பழி வந்து பாராயோ?

    ஆர்த்து ஆணைக்கு அரசு உந்தி அமரர் கணத்தொடும்
அடர்ந்த போர்த்தானை இந்திரனைப் பொருது -
ஆரவாரம் செய்து
யானைகளுக்கு அரசனான ஐராவதத்தைச் செலுத்தித் தேவர் கூட்டத்துடனே
நெருங்கிய போர்ப் படையோடு கூடிய இந்திரனை எதிர்த்துப் போர் புரிந்து;
அவனைப் போர் தொலைத்து வேர்த் தானை உயிர் கொண்டு
மீண்டானை -
அவனைப் போரிலே அழியச் செய்து அச்சத்தால் உடல்
வியர்த்துத் தப்பி உயிர் கொண்டு ஓடிப்போனவனை; பண்டு வெரிந்
பார்த்தானே -
முன்பு முதுகிட்டோடப் பார்த்த இராவணனே; யான்பட்ட
பழி வந்து பாராயோ -
நான் இங்கு அடைந்த இழிவை நீ வந்து பார்க்க
மாட்டாயோ?.

     ஆனைக்கு அரசு - இந்திரனின் வாகனமாகிய ஐராவதம் எனும்
வெள்ளை யானையே. வெரிந் - புறமுதுகு.

     இப்பாடலுக்கு வேறு வகையில் பொருள் காண்பதும் உண்டு.
தேவேந்திரனை வென்ற இந்திரசித்தே! பெருவலிமை படைத்த நீ எனக்கு
நேர்ந்த இப்பழியைப் பார்த்து இதற்கு மாற்றம் செய்யமாட்டாயா? என்று
சூர்ப்பணகை கதறினாள் என்பர்.

     இராவணன் திக்கு விசயம் செய்து யாவரையும் வென்ற போது
விண்ணுலகு சென்று அங்கும் இந்திரனுடன் போர் புரிந்தான். அவன் தேவர்
படையோடு ஐராவத யானை மீதேறி இராவணனும் வியக்கப் போர்
புரிந்தான். அப்போது இராவணன் மகன் மேகநாதன் மாயை புரிந்து போர்
செய்த போது இந்திரன் புறமுதுகிட்டோட அவனை மாயைப் பாசத்தால்
பிணித்துச் சிறையில் அடைத்தான். அப்போது பிரமன் முதலான தேவர்கள்
வந்து