முகத்தைப் பார்த்து; வீர - வீரனே!; விரைந்தனை - மிக விரைவாக; இவள் தன் விடுகாதும் கொடி மூக்கும் ஈர இவள் நினைந்து இழைத்த பிழை என்' என்று வினவ - இவளுடைய தொங்கவிடப்பட்ட காதும் நீண்ட மூக்கையும் அறுத்தெறிய இவள் எண்ணிச் செய்த குற்றம் யாது எனக் கேட்கவும்; சூர நெடுந் தகை - சூரத்தன்மையும் பெருமையும் கொண்ட இலக்குவன்; அவனை அடிவணங்கி(ச்) சொல்லுவான் - இராமன் திருவடியைப் பணிந்து கூறலானான். மூரல் முறுவலன் - பற்கள் சிறிது வெளியே தெரியச் சிரிப்பவன் இப்படலத்தில் 'சீதை தன் நடையை நோக்கி, சிறியது ஓர் முறுவல் செய்தான்' (2736) எனக் கூறிப் பின் சூர்ப்பணகை காமவல்லியாய் வந்துரையாடிய போது 'வாள் எயிறு இலங்க நக்கான்' (2787) என்பதும் காண்க. மற்ற இரு உறுப்புகளைக் கூறிய இராமன் கொங்கைகளைக் கூறாமை 'ஒழுக்க முடையவர்க்கு ஒல்லாவே தீய வழுக்கியும் வாயால் சொலல்' (குறள். 139) என்ற வள்ளுவர் காட்டிய ஒழுக்கமுடைமைக்கு ஏற்ற செயலாம். 'கொடி மூக்கு' என முன்னும் வந்தது (2850). இப்படல இறுதியிலும் (2874) கொடிமூக்கு குறிக்கப் பெறும். இவள் கொடுஞ் செயலே இலக்குவனை அவ்வாறு விரைந்து செயல்படுமாறு தூண்டியிருக்கும் என்ற கருத்து வெளிப்பட 'இவள் இழைத்த பிழை என்?' என இராமன் கேட்ட கேள்வி அமைகிறது. 120 | 2852. | 'தேட்டம்தான் வாள் எயிற்றில் தின்னவோ? தீவினையோர் கூட்டம்தான் புறத்து உளதோ? குறித்த பொருள் உணர்ந்திலனால்; நாட்டம்தான் எரி உமிழ, நல்லாள்மேல் பொல்லாதாள் ஓட்டந்தாள்; அரிதின் இவள் உடன்று எழுந்தாள்' என உரைத்தான். |
வாள் எயிற்றில் தின்ன(த்) தேட்டம் தானோ - கூரிய பற்களால் தின்னுதற்குத் தேடுதலாலேயோ; தீவினையோர் கூட்டம் தான் புறத்து உளதோ - கொடுஞ் செயல் புரிகின்ற அரக்கர் கூட்டம் பின்னே இருந்ததோ?; குறித்த பொருள் உணர்ந்திலன் - (இவள்) செய்யக் கருதிய காரணத்தை அளிந்தேனில்லை; பொல்லாதாள் நாட்டம் தான் எரி உமிழ - தீமை புரியும் இவளுடைய கண்கள் தீயைக் கக்க; அரிதின் உடன்று இவள் எழுந்தாள் - பிறர்க்கு உணர இயலா வகையில் கோபித்து இவள் புறப்பட்டாள்; நல்லாள் மேல் ஓட்டந்தாள் என உரைத்தான் - நற்பண்புள்ள சீதையை நோக்கி ஓடி வந்தாள் என்று சொன்னான்; ஆல் - அசை. தேட்டம் - தேடுதல், நாட்டம் - கண், பொருள் - காரணம். இலக்குவனுக்குச் சூர்ப்பணகை செய்த செயலின் காரணம் தெரியவில்லை. சீதையைக் கைப்பற்றித் தின்னுதற்குத் தான் மட்டும் வந்தாளா அன்றித் தன் அரக்கர் கூட்டத்துடன் வந்தாளா எனத் தெரியவில்லை. 'தம்பி இருண்ட |