பக்கம் எண் :

சூர்ப்பணகைப் படலம் 233

'ஓடிப் போ' என்று இராமன் கடிதலும், அவள் தன்னை ஏற்குமாறு
இறைஞ்சலும்

2854.'பேடிப் போர் வல் அரக்கர்
     பெருங் குலத்தை ஒருங்கு அவிப்பான்
தேடிப் போந்தனம்; இன்று,
     தீ மாற்றம் சில விளம்பி,
வீடிப் போகாதே; இம்
     மெய் வனத்தை விட்டு அகல
ஓடிப் போ' என்று உரைத்த
     உரைகள் தந்தாற்கு, அவள் உரைப்பாள்:

    (சூர்ப்பணகை சொற்களைக் கேட்டு இராமன்) பேடிப் போர் வல்
அரக்கர் பெருங்குலத்தை ஒருங்கு அவிப்பான் தேடிப் போந்தனம் -
பேடித் தன்மையுள்ள மாயப் போர்கள் செய்வதில் வல்ல இராக்கதர்களின்
பெரிய குலத்தை முற்றிலும் அழிக்க அவர்களைத் தேடி இங்கு வந்தோம்;
இன்று தீ மாற்றம் சில விளம்பி வீடிப் போகாதே - இப்போது தீய
சொற்களில் சிலவற்றைக் கூறி அழிந்து போகாதே; இம் மெய் வனத்தை
விட்டு அகல ஓடிப்போ -
மெய்ம்மைக்குரிய இந்தக் காட்டிலிருந்து
அகன்று ஓடிப் போ; என்று உரைத்த உரைகள் தந்தாற்கு அவள்
உரைப்பாள் -
எனக் கூறிய சொற்களைச் சொன்ன இராமனிடம்
சூர்ப்பணகை இவ்வாறு கூறலானாள்.

     பேடித்தல் - அச்சம் கொள்ளல் எனக் குடநாட்டு வழக்குப் பற்றிப்
பொருள் கூறுவர். அறப் போர் புரியாமல் மறைந்திருந்து பல மாயம் செய்து
போர் புரியும் அரக்கரைப் பேடிப் போர் செய்வோராகக் கூறினான்.
எனலாம். இனிச் சூர்ப்பணகையையும் அச்சுறுத்தினான் இராமன்.

     'உரை கடந்தான்' என்று புணர்ச்சிச் செயன்மைப் பட்டு விளங்கும்
தொடர்க்குப் பல வகையில் பொருள் காண்பர்.

     உரை கடந்தான் என்ற தொடர்க்கு வேதியர் முனிவர் தேவர் முதலானோர் சொற்கள் கூறும் பொருளுக்கு அப்பாற்பட்டவன் என்பர்.

     உரைகள் தந்தான் என்பதற்கு வேதங்களை (ப்பிரமனுக்கு)
உரைத்தவன் என்பர்.                                          123

2855.'நரை திரை என்று இல்லாத
     நான்முகனே முதல் அமரர்
கரை இறந்தோர், இராவணற்குக் கரம்
     இறுக்கும் குடி என்றால்,
விரையும் இது நன்று அன்று; வேறு
     ஆக யான் உரைக்கும்