பக்கம் எண் :

சூர்ப்பணகைப் படலம் 235

     மூக்கு என்றது அத்துடன் காதுகளையும் முலைகளையும் குறித்து
நின்றது. தயமுகனார் இராவணனின் பத்துத் தலை உடைமையைச்
சுட்டுகிறது. நாகரிகம் - கண்ணோட்டம். பெயக் கண்டும் நஞ்சுண்டமைவர்
நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் (குறள். 580) என்ற ஆட்சியைக் காண்க.
நாகரிகத்து (பெருங். 1.35.214) எனப் பெருங்கதையிலும் இப்பொருளில்
வந்துளது. தங்கையின் மூக் கரிதல் கேட்டு இராவணன் இராமனின் குல
முதலை அரிதல் உறுதி எனச் சூர்ப்பணகை கூறுகிறாள்.

     இராமன் மறையின் அவன் அழகும் அழியுமே எனத் தன் காம
வேகத்தில் சூர்ப்பணகை புலம்புகிறாள். இனி, அழகின் பொருளாக இருந்த
தன் மூக்கை அரிந்து வீணாக்கி விட்டமையைச் சுட்டினாள் என்பர்.
புல்லிடை உகுத்தல் - வீணாக்கல் 'புல்லிடை உகுத்த அமுது ஏயும் போல்
எனக் கூனி கைகேயியிடம் கூறுவாள் (1468). பரதன் கோசலையிடம்
சூளுரை கூறியபோதும் 'ஆண் தொழில் புல்லிடை உகுத்தனென்' என்பான்.
(2214). தயமுகனார் - வடசொல் திரிபு. அரிந்தீர் - காலவழுவமைதி
இப்பாடலில் உடனிகழ்ச்சி அணி உளது.                          125

2857.'வான் காப்போர், மண் காப்போர்,
     மாநாகர் வாழ் உலகம்-
தான் காப்போர், இனி தங்கள் தலை
     காத்து நின்று, உங்கள்
ஊன் காக்க உரியார் யார்?
     என்னை, உயிர் நீர் காக்கின்,
யான் காப்பென்; அல்லால், அவ்
     இராவணனார் உளர்!' என்றாள்

    என்னை நீர் உயிர் காக்கின் - (என் ஆசையை நிறை வேற்றி) என்
உயிரை அழியாமல் நீர் காப்பீரானால்; யான் காப்பென் - நான் உங்களை
இராவணனாரிடமிருந்து காப்பேன்; அல்லால் இனி அவ் இராவணனார்
உளர் -
அல்லாவிடில் உம்மை அழிக்க என் அண்ணனாம் அந்த
இராவணனார் இருக்கிறார்; (அதனால்) வான் காப்போர் - மேலுலகைக்
காக்கும் தேவர்களிலும்; மண்காப்போர் - நிலவுலகைக் காக்கும்
அரசர்களிலும்; மாநாகர் வாழ் உலகம் காப்போர் - பெரிய நாகர்கள்
வாழும் உலகங்காப்போரிலும்; தங்கள் தலைகாத்து நின்று - தங்களுடைய
தலையை அறுபடாமல் காத்து; உங்கள் ஊன் காக்க உரியார் யார்
என்றாள் -
உங்களுடைய உடல்களைப் பாதுகாக்கத் தக்கவர் யார் என்று
கேட்டாள். (ஒருவருமில்லை, என்னைத் தவிர). தான் - அசை.

     மண்ணுலகு விண்ணுலகு மற்றெல்லா உலகுகள் ஆகியவற்றில்
உள்ளவர்கள் இராவணனுக்கு அடிப்பட்டவரே. அவர்களில் எவரும்
இராமனைக் காக்க இராவணனை எதிர்த்து வாரார். எனவே உங்களைக்
காக்க நான் ஒருத்தியே உளேன்' எனச் சூர்ப்பணகை கூறினாள்.

     ஊன் - உடல் 'ஊனைக் குறித்த உயிரெல்லாம்' (குறள். 1013) என
வருதல் காண்க.