சிவனும் - சிவபெருமானும், மலர்த்திசை முகனும் - தாமரை மலர் மீது இருக்கும் பிரமனும், திருமாலும் - மகாவிட்டுணுவும்; தெறு குலிசத்து அவனும் - பகைவரை அழிக்கும் வச்சிரப் படையுடைய இந்திரனும்; அடுத்து ஒன்றாகி நின்றன்ன உருவோனே - சேர்ந்து ஒன்றாகி நின்றது போன்ற அழகிய உருவம் உடையவனே!; புவனம் அனைத்தையும் ஒருதன் பூங்கணையால் உயிர் வாங்கும் அவனும் - உலகங்கள் எல்லாவற்றையும் ஒப்பற்ற தன் மலர் அம்புகளால் எல்லா உயிர்களையும் வருத்தும் அம் மன்மதனும்; இவனே போல் அருள் இலனால் உனக்கு இளையானோ - உன் தம்பி இலக்குவனைப் போல இரக்கமற்றவனாய் இருப்பதால் அவனும் உனக்குத் தம்பியோ? சிவன் அழிவுக்கும், பிரமன் படைப்பிற்கும், திருமால் காப்பிற்கும் உள்ளது போல் இராமன் முத்தொழிலும் ஒருங்கே செய்யும் முதல்வன் போல் விளங்குவதை இப்பாடல் சுட்டும். மன்மதன் பெண்களிடம் அன்பின்றி அவர்களைக் காம நோயால் துன்புறுத்துவது போன்று இலக்குவனும் தன் உறுப்புகளை அறுத்துத் துன்பம் செய்தான் என்பது சூர்ப்பணகை கொண்ட பொருளாம். மன்மதனின் ஐம் பூங் கணைகளில் நீல மலர் உயிரைக் கொல்லும் ஆற்றலுடையது. இராமனை விளித்து இலக்குவனின் குறையைக் கூறுகின்றாள் சூர்ப்பணகை. 'ஆக்கரியமூக்கு' எனத் தொடங்கும் பாடலிலிருந்து (2856) 'விண்டாரே' என்பது வரை (2862) பன்மையில் விளித்து இங்கு ஒருமையைப் பயன்படுத்தியுள்ளமை எண்ணுதற்குரியது. இவற்றுள் சில இருவரையும் சில இராமனையும் குறிப்பனவாக உள்ளன. ஓகாரம் வினா:ஏகாரம் பிரிநிலை. 132 அறுசீர் ஆசிரிய விருத்தம் 2864. | பொன் உருவப் பொரு கழலீர்! புழை காண, மூக்கு அரிவான் பொருள் வேறு உண்டோ? "இன் உருவம் இது கொண்டு, இங்கு இருந்து ஒழியும் நம் மருங்கே; ஏகாள் அப்பால்; பின், இவளை அயல் ஒருவர் பாரார்" என்றே, அரிந்தீர்; பிழை செய்தீரோ? அன்னதனை அறிந்து அன்றோ, அன்பு இரட்டி பூண்டது நான்? அறிவு இலேனோ? |
பொன் உருவப் பொருகழலீர் - பொன்னால் ஆக்கப்பட்ட அழகுள்ள வீரக்கழல் அணிந்தவரே!; புழைகாண மூக்கு அரிவான் பொருள் வேறு உண்டோ - பெருந்துளைப் படும்படி என மூக்கை அறுத்ததற்கு வேறு ஏதேனும் பொருள் உள்ளதா?; (எது வெனில்); இன் உருவம் இது கொண்டு இங்கு இருந்து ஒழியும் நம்மருங்கு - (மூக்கறு படலுக்கு முன்னிருந்த) இனிய அழகிய வடிவம் இதைக் கொண்டு இவ்விடத்திலிருந்து சென்று விடுவாள் |