எங்களுக்கு எந்தவிதக் கட்டளையுமிடாமல் நேரே போருக்குச் சென்றால் எங்கள் அடிமைத் திறம் என்ன பயனைத் தரும்? என்பது; இகழ்ச்சிக் குறிப்பு. நம்பி - அண்மை விளி. 12 2887. | 'நன்று சொல்லினிர்; நான் இச் சிறார்கள்மேல் சென்று போர் செயின், தேவர் சிரிப்பரால்; பொன்று, சோரி குடித்து, அவர் கொள்கையை வென்று, மீளுதிர் மெல்லியலோடு' என்றான். |
நன்று சொல்லினிர் - நன்றாகச் சொன்னீர்கள்; நான் இச்சிறார்கள் மேல் - இந்த மானிடச் சிறுவர்களையெதிர்த்து; சென்று போர் செயின் - போய்ப் போர் புரிந்தால்; தேவர் சிரிப்பர் - தேவர்கள் நம்மை இகழ்ந்து சிரிப்பார்கள்; கொன்று சோரி குடித்து - (ஆதலால்) நீங்கள் சென்று அவர்களைக் கொன்று அவர்களின் இரத்தத்தைப் பருகி; அவர் கொள்கையை வென்று - அவர்கள் கொண்ட கோட்பாட்டைச் சிதைத்து வெற்றி கொண்டு; மெல்லியலோடு மீளுதிர் - அவர்களிடமுள்ள மென்மைத் தன்மையுடைய பெண்ணோடு திரும்பி வாருங்கள்; என்றான் - என்று அந்த வீரர்களுக்குக் கட்டளையிட்டான். நன்று சொல்லினிர் - தக்கதையே சொன்னீர்கள் என்பது. அவர் கொள்கை : அரக்கர்களைக் கொன்று அறத்தைக் காப்பது என்ற அவர்களின் கோட்பாடு. நிலவுலகில் நிகழும் போரை வானத்திலிருந்து காணுதல் தேவர்தம் இயல்பு. ஆல் : ஈற்றசை. 13 2888. | என்னலோடும், விரும்பி இறைஞ்சினார்; சொன்ன நாண்இலி அந்தகன் தூது என, அன்னர் பின் படர்வார் என, ஆயினார்; மன்னன் காதலர் வைகு இடம் நண்ணினார். |
என்னலோடும் - என்று கரன் உத்தரவிட்ட அளவிலே; விரும்பி இறைஞ்சினார் - மகிழ்ச்சியோடு அவனை வணங்கி; சொன்ன நாண் இலி- இராமலக்குவர்களைப் பற்றிச் செய்தி கூறின வெட்கங் கெட்டவளான சூர்ப்பணகையை; அந்தகன் தூது என - யமன் அனுப்பிய தூதாக |