| பூத்தது அன்ன பொரு இல் தடக் கையால், ஆத்த நாணின் அரு வரை வாங்கினான். |
ஏத்து வாய்மை இராமன் - யாவரும் புகழ்ந்து கொண்டாடும் சத்தியத்தையுடைய இராமன்; இளவலை - தம்பியான இலக்குவனை (நோக்கி); தையலை(க்) காத்தி என்று - தேவியாகிய சீதையை நீ பாதுகாத்துக் கொண்டிரு என்று கூறி; பூத்தது கற்பகம் அன்ன - பொலிவு பெற்ற கற்பக மரம் போன்ற; பொருவு இல் - வேறு ஒப்பில்லாத; தன் தடக் கையால் - தன்னுடைய பெரிய கையினால்; ஆத்த நாணின் - கட்டப்பட்ட நாண்கயிற்றையுடைய; அருவரை வாங்கினான் - அழித்தற்கரிய மலை போன்ற வில்லை எடுத்துக் கொண்டான். ஏத்து வாய்மை இராமன் - தண்டகாரணியத்தில் வசிக்கும் முனிவர்கள் அரக்கர்களின் தொல்லை பொறுக்க முடியாமல் தன்னைச் சரணடைந்த பொழுது அவர்களுக்கு இராமன் அந்த அரக்கர்களையெல்லாம் வேரறுப்பதாக வாக்குறுதி தந்திருந்ததைப் பழுதுபடாதவாறு நிறைவேற்றத் தொடங்கினான் என்பது. ஆத்த - யாத்த: மரூஉ; வரை - உவமையாகுபெயர். 17 2892. | வாங்கி, வாளொடு வாளி பெய் புட்டிலும் தாங்கி, தாமரைக் கண்ணன், அச் சாலையை நீங்கி, 'இவ்வழி நேர்மின், அடா!' எனா, வீங்கு தோளன் மலைதலை மேயினான். |
தாமரைக் கண்ணன் - செந்தாமரை மலர் போன்ற அழகிய கண்களையுடைய இராமன்; வாங்கி - வில்லை எடுத்துக் கொண்டு; வாளொடு - வாளுடனே; வாளி பெய் புட்டிலும் - அம்புகளை வைத்துள்ள அம்பறாத் தூணியையும்; தாங்கி - தரித்துக் கொண்டு; அச் சாலையை நீங்கி - அந்தப் பர்ணசாலையை விட்டு நீங்கி; இவ்வழி நேர்மின் அடா எனா - இந்த இடம் (போருக்கு) வாருங்களடா என்று (அரக்கரை நோக்கிக்) கூறி; வீங்கு தோளன் - (போர் கருதியதால்) பூரித்த தோள்களையுடையவனாய்; மலைதலை மேயினான் - போர் செய்யத் தொடங்கினான். இராமன் வாளை இடையிலும், அம்புப் புட்டிலைத் தோள்புறத்திலும் தாங்கினான் என்பது. உள்ளத்தைக் கவரும் அழகும் குளுமையும் நிறமும் உருவும் ஒத்தமையால் தாமரைமலர் இராமனின் கண்களுக்கு உவமையாயிற்று. 18 |