பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 267

பொறியின், கான் எங்கும்
     வெங் கனல் பொங்கவே.

    தறியின் நீங்கிய - (மதத்தால்) கட்டுத்தறியிலிருந்து
வெளிப்பட்டவையும்; குறிகொளா - (எவரையும்) ஒரு பொருட்டாக
மதியாதவையுமான; தாழ் தடக்கைத் துணை - தாழ்ந்து தொங்குகின்ற
பெரிய இரண்டு துதிக்கைகளையுடைய; மதவேழக் குழு அனார் - மதங்
கொண்ட யானைக் கூட்டத்தை ஒத்தவர்களாகிய அரக்கர்களின்; செறியும்
வாளொடு வாள் -
அடர்ந்த வாளாயுதங்கள் ஒன்றோடு ஒன்று; இடை
தேய்ந்து -
நடுவிலே உராய்தலால்; உகும் பொறியின் - வெளிச் சிந்தும்
தீப் பொறிகளால்; கான் எங்கும் - அந்த வனம் எங்கும்; வெம் கனல்
பொங்க -
கொடிய நெருப்பு ஓங்கியெழவும்; ஏ - ஈற்றசை.

     அரக்கப் படை வீரர்க்குத் தறியின் நீங்கிய தாழ் தடக்கைத் துணை
மத வேழங்கள் உவமையாம். இந்தப் பாடல், தேர்ப் படையைத் தொடர்ந்து
சென்ற அரக்கப் படை வீரர்களின் செறிவையும் அவர்கள் ஏந்திய
வாட்படைகளின் மிகுதியையும் விளக்கியது. தறி - தூண். தன்னைக்
கட்டியுள்ள தறியைக் கடுங்கோபத்தால் முறித்துத் தள்ளிவிட்டுத் தடையின்றி
வெளிச் செல்வது மதயானையின் இயல்பு.                           27

2902.முருடு இரண்டு முழங்குறத்
     தாக்கு ஒலி
உருள் திரண்டு எழும்
     தேர் ஒலியுள் புக,
அருள் திரண்ட அருக்கன்
     தன்மேல், அழன்று
இருள் திரண்டு வந்து
     ஈண்டியது என்னவே,

    இரண்டு - இரண்டு பக்கங்களிலும்; முருடு முழங்குற - முருடு
என்னும் போர்ப் பறை முழக்கம் உண்டாகும்படி; தாக்கு ஒலி -
அடிக்கப்படுதலாலாகிய ஓசை; உருள் திரண்டு எழும் - சக்கரங்கள் பல
ஒன்றாக உருளுவதால் உண்டாகும்; தேர் ஒலியுள் புக - தேர்களின்
ஆரவாரத்தினுள்ளே அடங்கவும்; அருள் திரண்ட - கருணையே
(ஓருருவாகத்) திரண்டு வடிவெடுத்தாற் போன்று விளங்கும்; அருக்கன்தன்
மேல் -
சூரியன்மேல்; அழன்று - கோபித்து; இருள் திரண்டு வந்து
ஈண்டியது என்ன -
இருளெல்லாம் ஒன்று சேர்ந்து நெருங்கியது
போலவும்.

     இராமனுக்குச் சூரியனையும், அவன்மேல் போருக்கு எழுந்து
நெருங்கிய அரக்கர் சேனைக்குச் சூரியன்மேல் வந்து நெருங்கிய இருளின்
தொகுதியையும் உவமை கூறியதால் கதிரவன்முன் இருள் போல
இராமபிரான்முன் அரக்கர்கள் எளிதில் அழியப் போவது பெறப்படும்.