பக்கம் எண் :

கரன் வதைப் படலம் 275

2915. இந்திரன் முதலினோர்
     எறிந்த மாப் படை
சிந்தின தெறித்து உக,
     செறிந்த தோளினார்;
அந்தகன், அடி தொழுது
     அடங்கும் ஆணையார்;
வெந் தழல் உருவு
     கொண்டனைய மேனியார்

    இந்திரன் முதலினோர் - இந்திரன் முதலான தேவர்கள்; எறிந்த
மாப்படை -
(தம்மேல்) வீசித் தாக்கிய சிறந்த ஆயுதங்கள்; சிந்தின
தெறித்து உக -
(தம்மைச் சிறிதும் ஊறு படுத்தாமல்) தெறித்துச் சிதறிப்
பொடியாகச் சிந்திப் போகும்படி; செறிந்த தோளினார் - வலிமை செறிந்த
தோள்களை யுடையவர்கள்; அந்தகன் அடிதொழுது - (உயிர்களை
வதைக்கும்) யமனும் தங்கள் பாதங்களில் வணங்கி; அடங்கும் ஆணையார்
-
அடங்கிப் பணியும்படி செய்யும் அதிகாரமுடையவர்கள்; வெந்தழல் -
கொடிய நெருப்பே; உருவு கொண்டு அனைய மேனியார் - ஒரு
வடிவெடுத்து வந்தாற்போன்ற வடிவம் உடையவர்கள்.

     வெம் தழல் உருவு கொண்டனைய மேனியார்- தற்குறிப்பேற்றவணி. 41

2916. சூலமும், பாசமும், தொடர்ந்த
     செம் மயிர்ச்
சாலமும், தறுகணும்,
     எயிறும், தாங்கினார்;
'ஆலமும் வெளிது' எனும்
     நிறத்தர்; ஆற்றலால்,
காலனும், 'காலன்' என்று,
     அயிர்க்கும் காட்சியார்.

    சூலமும் - சூலாயுதத்தையும், பாசமும் - பாசம் என்னும்
ஆயுதத்தையும்; தொடர்ந்த செம்மயிர்ச் சாலமும் - அடர்ந்த சிவந்த
மயிர்த் திரளையும்; தறுகணும் - அஞ்சாமையையும்; எயிறும் - கோரப்
பற்களையும்; தாங்கினார் - கொண்டவர்கள்; ஆலமும் வெளிது எனும்
நிறத்தர் -
நஞ்சும் (தங்கள் நிறத்திற்கு முன்) வெண்மையானது என்று
சொல்லத்தக்கவாறு கரிய நிறத்தையுடையவர்கள்; ஆற்றலால் - (தமது)
வலிமையால்; காலனும் - யமனும்; காலன் என்று அயிர்க்கும் -
(தன்னையழிக்கும்) யமனோ என்று ஐயம் கொள்ளத்தக்க; காட்சியார் -
தோற்றமுடையவர்கள்.