காடுகளெங்கும் புழுதி படிந்தன; வான் உயர் மலையின் - வானோங்கி யுயர்ந்த மலைகளின் மேல்; கனம் துகள் பட்டன - படிந்திருந்த மேகங்களும் அத் தூசியால் மூடப்பட்டன; கடல்கள் தூர்ந்தன - கடல்களும் தூர்ந்துபோயின; இனி இசைப்பது என்? - இனிச் சொல்ல வேண்டுவது என்ன உள்ளது?; ஏ - ஈற்றசை. சேனைகள் எழுப்பிய புழுதி வனம் முழுதும் தூளிமயமாக்கியதுமல்லாமல் வானத்து மேகங்களையும் தூளியாக்கியது; கடலிலும் நிரம்பித் தூர்த்தது. தொடர்புயர்வு நவிற்சியணி. சேனையைக் கடல் என்றது அதன் மிகுதிநோக்கி. 54 | 2929. | நிலமிசை, விசும்பிடை, நெருக்கலால், நெடு மலைமிசை மலைஇனம் வருவபோல், மலைத் தலைமிசை, தலைமிசை, தாவிச் சென்றனர்- கொலைமிசை நஞ்சு எனக் கொதிக்கும் நெஞ்சினார். |
நிலமிசை - தரையின் மீதும்; விசும்பு இடை - ஆகாயத்தின் மேலும்; நெருக்கலால் - (இடைவெளியில்லாமல்) நெருக்க முண்டானதால்; கொலை மிசை நஞ்சு என - போரில் கொல்லுதலை மேற்கொண்டு விடத்தைப் போன்று; கொதிக்கும் நெஞ்சினார் - கொதிக்கின்ற மனமுடைய கொடிய அரக்கர்; நெடு மலைமிசை - உயர்ந்த மலைகளின் மேல்; மலை இனம் வருவபோல் - வேறு மலைக் கூட்டங்கள் ஏறி வருவன போல; மலைத் தலைமிசைத் தலைமிசை - மலைகளின் சிகரங்கள் தோறும்; தாவிச் சென்றனர் - (கால் வைத்துத்) தாண்டிக் கொண்டு சென்றார்கள். பூமியிலும் வானத்திலும் சேனைகள் நெருங்கி வெற்றிடமில்லாமல் ஆக்கியதால் பல அரக்கர்கள் மலைகளின் மேலே பாய்ந்து நடந்து போயினர் என்பது அவர்களுக்கு மலை மேல் மலை வருவதை இல்பொருள் உவமையாகக் கூறினார். வருவ; பெயர். 55 அறுசீர் ஆசிரிய விருத்தம் | 2930. | வந்தது சேனை வெள்ளம், வள்ளியோன் மருங்கு-மாயா- பந்த மா வினையம் மாளப் பற்று அறு பெற்றியோர்க்கும் உந்த அரு நிலையது ஆகி, உடன் உறைந்து உயிர்கள்தம்மை அந்தகற்கு அளிக்கும் நோய்போல், அரக்கி முன் ஆக அம்மா! |
|