| | மீளி மொய்ம்பினரும், 'சேனை மேல்வந்தது உளது' என்று உன்னா, |
தூளியின் படலை - தூசியின் தொகுதி; வந்து தொடர்வு உற - முன்னே வந்து படியவும்; மரமும் தூறும் - (அக் காட்டிலிருந்த) மரங்களும் புதர்களும்; தாள்இடை ஒடியும் ஓசை - வரும் அரக்க வீரர்களின் கால்களில் அகப்பட்டு ஒடிவதால் உண்டாகிய ஓசை; 'சடசட' ஒலிப்ப - சடசடவென்று ஒலிக்கவும்; கானத்து ஆளியும் - காட்டிலுள்ள யாளிகளும்; அரியும் - சிங்கங்களும்; அஞ்சி இரிதரும் - பயந்து நிலைகெட்டு ஓடுகின்ற; அமலை நோக்கி - பேராரவாரத்தைப் பார்த்து; மீளி மொய்ம்பினரும் - வலிய தோள்களையுடைய இராமலக்குவரும்; சேனை மேல் வந்தது உளது என்று உன்னா - அரக்கர் சேனை தம்மோடு போருக்கு வந்துள்ளது என்று எண்ணி.. உன்னா என்னும் செயவென் எச்சம் அடுத்த செய்யுளிலுள்ள மொழியலுற்றான் என்ற வினை கொண்டு முடியும். படலை - கூட்டம், தொகுதி; அமலை - பேரொலி. சடசட - ஒலிக்குறிப்பு. தூளியின் தொகுதியும், சடசட ஒலியும், ஆளியும் சிங்கமும் அஞ்சியோடும் ஆரவாரமும் நோக்கி மீளி மொய்ம்பினரான இராமலக்குவரும் அரக்கர் சேனை போர் செய்ய வந்துள்ளது என்று எண்ணினர் என்பது. 59 இலக்குவனைத் தடுத்து இராமன் போருக்கு எழுதல் | 2934. | மின் நின்ற சிலையன், வீரக் கவசத்தன், விசித்த வாளன், பொன் நின்ற வடிம்பின் வாளிப் புட்டிலன், புகையும் நெஞ்சன், 'நில்; நின்று காண்டி, யான் செய் நிலை' என விரும்பி நேரா முன் நின்ற பின் வந்தோனை நோக்கினன், மொழியலுற்றான்: |
மின் நின்ற சிலையன் - மின்னல் போன்று ஒளி பொருந்திய வில்லைத் தாங்கியவனும்; வீரக் கவசத்தன் - அழியாத வலிமை வாய்ந்த கவசத்தையுடையவனும்; விசித்த வாளன் - (இடையில்) கட்டிய உடைவாளையுடையவனும்; பொன் நின்ற - அழகு பொருந்திய; வடிம்பின் வாளிப் புட்டிலன் - நுனியுள்ள அம்புகளைக் கொண்ட அம்பறாத் தூணியையுடையவனும்; புகையும் நெஞ்சன் - கோபத் தீ மூண்ட மனமுடையவனுமாய் (இராமனை நோக்கி); 'நில் - (போர் தொடங்காது) நில்; நின்று - (அப்படி) நின்று; யான் செய் நிலை - நான் செய்யக் கூடிய போரின் திறமையை; 'காண்டி' என - காண்பாய் என்று சொல்லி; விரும்பி- (போர் செய்ய) விருப்பங் கொண்டு; நேரா - போருக்கு ஆயத்தமாகி; முன் நின்ற - (தனக்கு) முன்னே வந்து நின்ற; பின் வந்தோனை - (தன்) |