| 3043. | கடுங் கரன் எனப் பெயர் படைத்த கழல் வீரன், அடங்கலும் அரக்கர் அழிவுற்றிட, அழன்றான்; ஒடுங்கல் இல் நிணக் குருதி ஓதம்அதில் உள்ளான் நெடுங் கடலில் மந்தரம் என, தமியன் நின்றான். |
கடுங் கரன் எனப் பெயர் படைத்த - கொடிய கரன் என்று பேர் பெற்ற; கழல் வீரன் - வீரக் கழல் பூண்ட வீரன்; அரக்கர் அடங்கலும் அழிவு உற்றிட - அரக்கரெல்லோரும் (போரில்) அழிவடைய; அழன்றான் - சினங் கொண்டான்; ஒடுங்கல் இல் - குறைவில்லாத; நிணக் குருதி ஓதம் அதில் - கொழுப்போடு கூடிய இரத்த வெள்ளத்தினிடையே; உள்ளான் - உள்ளவனான கரன்; நெடுங் கடலில் மந்தரம் என - பெரிய கடலினிடையே மந்தர மலை போல; தமியன் நின்றான் - தனித்தவனாக நின்றான். அரக்கர் எல்லோரும் போரில் அழிவெய்திட, நிணக் குருதி வெள்ளத்தில் நிற்கும் கரன் பாற்கடலைக் கடையும்பொழுது, அதனிடையில் நின்ற மந்தர மலை என்னும் மத்துப் போன்றவன் என்றார். 169 இராமன்முன் கரன் எதிர்ப்படல் | 3044. | செங் கண் எரி சிந்த, வரி வில் பகழி சிந்த, பொங்கு குருதிப் புணரியுள், புகையும் நெஞ்சன்- கங்கமொடு காகம் மிடைய, கடலின் ஓடும் வங்கம் எனல் ஆயது ஒரு தேரின்மிசை-வந்தான். |
புகையும் நெஞ்சன் - சினத்தீ மூளும் மனமுடைய அந்தக் கரன்; செங்கண் எரி சிந்த - சிவந்த கண்கள் நெருப்புப் பொறியைச் சொரியவும்; வரிவில் பகழி சிந்த - கட்டமைந்த வில் அம்புகளைப் பொழியவும்; பொங்கு குருதிப் புணரியுள் - மேலே பொங்கியெழுகின்ற இரத்தக் கடலிலே; கங்கமொடு காகம் மிடைய - கழுகுகளும் காக்கைகளும் நெருங்க; கடலில் ஓடும் வங்கம் எனல் ஆயது - கடலிலே விரைந்து செல்லும் கப்பலென்று உவமை சொல்லுமாறு; ஒரு தேரின் மிசை வந்தான்- ஒரு தேரின் மேல் வந்தான். |