தீ உருவ - நெருப்புப் போன்ற வடிவையுடையனவும்; கால் விசைய- காற்றைப் போல வேகம் உள்ளனவும்; செவ்வியன - பிற இலக்கணங்கள் எல்லாம் அமைந்தவையுமான; வெவ் வாய் வடிக்கணை ஆயிரம் - கொடிய வாயையும் கூர்மையுமுடைய ஆயிரம் அம்புகளை ஏவி; அரக்கர் பதி எய்தான் - அரக்கர் தலைவனான கரன் இராமன் மேல் தொடுத்தான்; தீ உருவ, கால் விசைய செவ்வியன - அவ்வாறே நெருப்புப் போன்ற வடிவுடையனவும் காற்றுப் போல வேகமுள்ளவையும் சிறப்புடையனவும்; வெவ் வாய் - கொடிய நுனிகளையுடையனவுமான; ஆயிரம் வடிக்கணை - ஆயிரம் கூரிய அம்புகளைத் தூண்டி; இராமனும் அறுத்தான் - இராமபிரானும் துணித்தான். கரன் வரும் போதே ஆயிரம் அம்புகளை எய்ய இராமபிரானும் அத்தகைய கணைகளால் அவற்றையறுத்தான் என்பது. கரன் கணை செலுத்தியதையும் இராமன் அவற்றைத் துணித்ததையும் ஒரே தொடர்களால் குறித்தது. போர் உத்தியில் சமநிலை காட்டப் போலும். 172 | 3047. | ஊழி எரியின் கொடிய பாய் பகழி ஒன்பான், ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும், எய்தான்; சூழ் சுடர் வடிக் கணை அவற்று எதிர் தொடுத்தே, ஆழி வரி விற் கரனும், அன்னவை அறுத்தான். |
ஏழ் உலகினுக்கும் ஒரு நாயகனும் - ஏழு வகையான உலகங்களுக்கெல்லாம் ஒப்பற்ற நாயகனான இராமபிரானும்; ஊழி எரியின் கொடிய - ஊழிக் காலத்து உலகையழிக்க வல்ல நெருப்பைக் காட்டிலும் கொடுமையுடையனவாய்; பாய் பகழி ஒன்பான் - பாய்ந்து செல்லும் ஒன்பது பாணங்களை; எய்தான் - (கரன்மேல்) தொடுத்தான்; ஆழி வரிவிற் கரனும் - வட்டமாக வளைந்த வில்லையுடைய கரன் என்னும் அரக்கனும்; சுடர் சூழ் வடிக் கணை - ஒளி பரவும் கூரிய (ஒன்பது) அம்புகளை; அவற்று எதிர் தொடுத்து - அந்தக் கணைகளுக்கு எதிராகச் செலுத்தி; அன்னவை அறுத்தான் - அந்த அம்புகளைத் துணித்தான்; ஏ - அசை. ஏழுலகினுக்கு ஒரு நாயகன் - கீழேழு, மேலேழு ஆகிய பதினான்கு உலகங்களுக்கும் தலைவனாகிய இராமபிரான். 'செம்மாண் தனிக்கோல் உலகேழினும் செல்ல நின்றான்' (168) எனத் தயரதன் சிறப்பிக்கப் பெற்றமையால் அவனுக்குப் பின் அவன் மைந்தனான இராமபிரானுக்கும் அவ்வுரிமையுடைமை காரணமாகவும் கூறப் பெற்றது எனலாம். 173 |