பக்கம் எண் :

364ஆரணிய காண்டம்

     இராமனும் கரனது அம்பு வாங்கும் வலக் கையை ஓர் அம்பினால்
தோளோடும் வீழ்த்தினான் என்பது. தூங்குதல் - தொங்குதல்; வாங்குதல் -
வெளியே எடுத்தல்.                                          182

3057. வலக் கை வீழ்தலும், மற்றைக்
     கையால் வெற்றி
உலக்கை, வானத்து உரும்
     என, ஓச்சினான்;
இலக்குவற்கு முன்
     வந்த இராமனும்
விலக்கினான், ஒரு வெங்
     கதிர் வாளியால்.

    வலக்கை வீழ்தலும் - (தனது) வலக்கை வெட்டுண்டு கீழே
விழுந்தவுடனே; மற்றைக் கையால் - (கரன்) இடக் கையினால்; வெற்றி
உலக்கை -
வெற்றி தரக் கூடிய உலக்கையை; வானத்து உரும் என -
மேகத்தினிடையே தோன்றும் இடியைப் போல; ஓச்சினான் - உயரே
எடுத்து (இராமன் மேல்) வீசினான்; இலக்குவற்கு முன் வந்த இராமனும் -
இலக்குவனுக்கு முன்னே பிறந்த இராமனும்; ஒரு வெம் கதிர் வாளியால் -
கொடிய ஒளியுடைய ஓர் அம்பினால்; விலக்கினான் - (தன் மேல்
படாதவாறு) தடுத்து விலக்கினான்.

     வலக் கையை இழந்த கரன் இடக்கையால் உலக்கையை இராமன்
மேல் எறிய, அவ் இராமனும் ஓர் அம்பினால் அதைத் தடுத்தான் என்பது.
இலக்குவற்கு முன் வந்த இராமன் : இரட்டுற மொழிதலால் இலக்குவனுக்கு
முன்னே பிறந்த இராமன் எனவும், போர்க்கெழுந்த இலக்குவனைத் தடுத்து
அவனுக்கு முன்னே வந்த இராமன் எனவும் பொருள் கொள்ளலாம்.    183

3058.விராவரும் கடு வெள்
     எயிறு இற்றபின்,
அரா அழன்றது அனைய
     தன் ஆற்றலால்
மரா மரம் கையில் வாங்கி
     வந்து எய்தினான்;
இராமன் அங்கு ஓர்
     தனிக் கணை ஏவினான்.

    விராவரும் - பொருந்தியுள்ள; கடு வெள் எயிறு - விடத்தையுடைய
தன் வெண்மையான பற்கள்; இற்றபின் - முறிபட்ட பின்பு; அரா
அழன்றது அனைய -
நாகப் பாம்பு சீறியதைப் போன்ற; தன் ஆற்றலால்-
தனது வல்லமையால்; மராமரம் கையில் வாங்கி - (கரன்) ஒரு
மராமரத்தைக் கையிலே எடுத்துக் கொண்டு; வந்து எய்தினான் -
(இராமனருகே)