பக்கம் எண் :

368ஆரணிய காண்டம்

     அரோ : ஈற்றசை. தேவர்கள் துதித்ததால் எழுந்த ஒலி கடல் ஒலித்தல் போலும் என்பது.

     மூத்தம் : முகூர்த்தம் - இரு நாழிகைப் பொழுது என்பர்.        189

சூர்ப்பணகை அழுது புலம்பி, இலங்கைக்கு ஏகுதல்

3064. இங்கு நின்றது
     உரைத்தும்: இராவணன்
தங்கை தன் கை,
     வயிறு தகர்த்தனள்;
கங்குல் அன்ன கரனைத்
     தழீஇ, நெடும்
பொங்கு வெங் குருதிப்
     புரண்டாள் அரோ.

    இங்கு நின்றது - இவ்விடத்தில் (சொல்லாமல்) எஞ்சி நின்ற
செய்தியை; உரைத்தும் - இனிச் சொல்லுவோம்; இராவணன் தங்கை -
இராவணன் தங்கையான சூர்ப்பணகை; தன் கை வயிறு தகர்த்தனள் -
தன் கைகளால் வயிற்றில் அடித்துக் கொண்டு; கங்குல் அன்ன கரனைத்
தழீஇ -
இருளையொத்த மேனியையுடைய கரனைத் தழுவி; நெடும்
பொங்கு வெம் குருதிப் புரண்டாள் -
மேலே பொங்கியெழுந்த நெடிய
வெப்பமான இரத்த வெள்ளத்தில் விழுந்து புரண்டாள்.

     அரோ : ஈற்றசை. கரன் என்றது அவனது உயிர் நீத்த உடலை. தழீஇ
சொல்லிசையளபெடை. வயிறு தகர்த்தல் - சோகமுற்ற மகளிரின் இயல்பு. 190

3065.'ஆக்கினேன் மனத்து ஆசை; அவ்
     ஆசை என்
மூக்கினோடு முடிய,
     முடிந் திலேன்
வாக்கினால், உங்கள்
     வாழ்வையும் நாளையும்
போக்கினேன்; கொடியேன்'
     என்று போயினாள்.

    மனத்து - என் மனத்தில்; ஆசை ஆக்கினேன் - (இராமன்பால்)
ஆசையை வளர்த்தேன்; அவ் ஆசை - அந்த (வேண்டாத) ஆசை; என்
மூக்கினோடு முடிய -
என் மூக்கு முதலியன அறுபட்டதோடு
முடிந்தொழிய; முடிந்திலேன் - (அவ்வளவில்) இறந்து படாத நான்;
வாக்கினால் - என் வாய்ச் சொற்களால்; உங்கள் வாழ்வையும் நாளையும்
போக்கினேன் -
உங்களுடைய வாழ்க்கையையும் வாழ்நாளையும்
ஒழித்தேன்; கொடியேன் -