தச்சனாகிய விசுவகர்மாவின்; புலன் எலாம் - சிற்ப நூலறிவு முழுவதையும்; தெரிப்பது - எடுத்துக் காட்டுவதாகிய; ஒரு - ஒப்பற்ற; புனை மணி மண்டபம் அதனில் - மணிகள் குயிற்றிச் செய்யப் பெற்ற சபை மண்டபத்திலே; பொலிய - (தன் வீற்றிருக்கையால்) அம் மண்டபம் அழகு பெறுமாறும்...(மன் ஓ - அசைகள்). இப்பாடல் முதல் இருபத்திரண்டு பாடல்களில் வினையெச்சங்களாகத் - (பொலிய, வயங்க, குலவ என்றாற் போல) தொடர்ந்து இருபத்து மூன்றாம் பாடலில் இருந்தனன் என்னும் வினைமுற்றால் பொருள் முடிவு எய்துகின்றது. இராவணனின் மணி மண்டபம் தெய்வத் தச்சனின் அறிவுத் திறமெலாம் புலப்படுத்துவது; அதன் மேலும் அதன் சிறப்பை வரம்பு இலா ஆற்றல் கொண்டதும் எவர்க்கும் தீமை தராத வகையில் செய்யப் பெற்றதுமான அறத்தை உவமையாக்கிப் புலப்படுத்திய பாங்கு நினையத்தக்கது. நான்முகனாலும் படைத்தற்கு அரியது; தெய்வத் தச்சன் புலன் எலாம் தெரிப்பது மண்டபத்தின் சிறப்பு. அம் மண்டபத்தில் வீற்றிருப்பதால் இராவணனுக்குப் பொலிவு என்பதனை உணர்த்தப் 'பொலிய' எனச் சுட்டினார். 2 3069. | புலியின் அதள் உடையானும், பொன்னாடை புனைந்தானும், பூவினானும் நலியும் வலத்தார் அல்லர்; தேவரின் இங்கு யாவர், இனி நாட்டல் ஆவார்? மெலியும் இடை, தடிக்கும் முலை, வேய் இளந் தோள், சேயரிக் கண், வென்றி மாதர் வலிய நெடும் புலவியினும் வணங்காத மகுட நிரை வயங்க மன்னோ. |
தேவரின் - தேவர்களுக்குள்ளே; புலியின் அதள் உடையானும் - புலியின் தோலை ஆடையாக உடுத்த சிவபெருமானும்; பொன்னாடை புனைந்தானும் - பொன் மயமான பீதாம்பரத்தை அணிந்துள்ள திருமாலும்; பூவினானும் - உந்தித் தாமரையில் வசிக்கும் பிரமனும்; நலியும் வலத்தார் அல்லர் - (இராவணனை) வருத்தும் வலிமையுடையவர் ஆகமாட்டார்; இங்கு - இவ்வுலகத்தில்; இனி யாவர் நாட்டல் ஆவார் - இனிமேல் வேறு எவர் (இராவணனை) வெல்லுதற்குக் குறித்தவர் ஆவார்! (எவரும் இல்லை), மேலும்; மெலியும் இடை - மெல்லியதாய் விளங்கும் இடையும்; தடிக்கும் முலை - பருத்துத் தோன்றும் மார்பகங்களையும்; வேய் இளந்தோள் - மூங்கிலுக்கு நிகரான இளம் தோள்களையும்; சேய் அரிக் கண் - சிவந்த வரிகளை உடைய கண்களையும்; வென்றி மாதர் - எவரையும் வெல்லும் தன்மையையும் கொண்ட மகளிரது; வலிய நெடும் புலவியினும் - உறுதியான நீண்ட ஊடற் காலத்தும்; வணங்காத - தாழ்வுறாத; மகுடநிரை - மணிமுடிகளின் வரிசை; வயங்க - ஒளி வீசித் துலங்கவும்....(மன், ஓ - அசைகள்). |