(இராவணன்) நோக்குவான் என்பதை; உன்னலர் - அறியாதவர்களாய்; கரதலம் சுமந்த உச்சியர் - (எப்போதும் தங்கள்) கரங்களைத் தலைமேற் சுமந்தவர்களாய்; துன்னினர் - நெருங்கி நின்று; முறை முறை - வரிசை வரிசையாக; துறையில் சுற்ற - அவை மண்டபத்தே சூழ்ந்து நிற்கவும்.... (ஏ- அசை). இராவணன் பார்வை படப் பரிதவித்துக் காத்து நிற்கும் வித்தியாதர வேந்தர் நிலை கூறப்பட்டது. உன்னலர், உச்சியர் - முற்றெச்சங்கள். 8 3075. | மங்கையர்திறத்து ஒரு மாற்றம் கூறினும், தங்களை ஆம் எனத் தாழும் சென்னியர், அங்கையும் உள்ளமும் குவிந்த ஆக்கையர், சிங்க ஏறு என, திறல் சித்தர் சேரவே. |
மங்கையர் திறத்து - (ஏவல்) மகளிரின் பால்; ஒரு மாற்றம் கூறினும் - ஏதேனும் கட்டளை மொழியினும்; தங்களை ஆம் என - (இராவணன்) தங்களிடம் கூறிய தாம் என்று; தாழும் சென்னியர் - வணங்கும் தலையினையும்; அங்கையும் உள்ளமும் - அழகிய கையும் மனமும்; குவிந்த ஆக்கையர் - வளைந்த உடம்பினையும் (உடையவர்களாய்); சிங்க ஏறு எனத் திறல் சித்தர் - ஆண் சிங்கம் போன்ற சித்தர்கள்; சேர - திரண்டு நிற்கவும்..... (ஏ - அசை). சித்தர்கள் ஒரு தேவ சாதியார் : தவப் பேராற்றலால் சித்தர்களானோரும் இராவணன் அவையிலே அவன் தவப் பெருக்கத்தால் சிறியோராயினர். 9 3076. | அன்னவன் அமைச்சரை நோக்கி, ஆண்டு ஒரு நல் மொழி பகரினும் நடுங்கும் சிந்தையர், 'என்னைகொல் பணி?' என இறைஞ்சுகின்றனர். கின்னரர், பெரும் பயம் கிடந்த நெஞ்சினர். |
அன்னவன் - இராவணன்; அமைச்சரை நோக்கி - தன் அமைச்சர்களைப் பார்த்து; ஆண்டு - அவ்விடத்தில்; ஒரு நல்மொழி பகரினும் - ஒரு நல்ல சொல்லைப் பேசிடினும்; நடுங்கும் சிந்தையர் - (தங்களைத் தண்டிக்கும்படி உரைத்ததாக எண்ணி) அஞ்சும் மனத்தவர்களாய்; |