பக்கம் எண் :

சூர்ப்பணகை சூழ்ச்சிப் படலம் 383

3088.ஊருவில் தோன்றிய உயிர்
     பெய் ஓவியம்
காரினில் செருக்கிய
     கலாப மஞ்ஞைபோல்,
வார் விசிக் கருவியோர்
     வகுத்த பாணியின்,
நாரியர், அரு நடம்
     நடிப்ப, நோக்கியே,

    ஊருவில் தோன்றிய - (நாராயண முனிவனது) தொடையினின்றும்
பிறந்து; உயிர்பெய் ஓவியம் - உயிர் நிரம்பிய ஓவியம் போன்ற ஊர்வசி
முதலான; நாரியர் - பெண்கள்; வார் விசிக் கருவியோர் வகுத்த
பாணியின் -
தோல் கயிற்றால் கட்டப்பட்ட இசைக் கருவியாளர்கள்
அமைக்கும் தாள ஒழுங்கிற்கேற்ப; காரினில் செருக்கிய கலாப மஞ்ஞை
போல் -
மேகங்களைக் கண்டு உவகை பூண்ட தோகை மயில்களைப்
போல; அருநடம் நடிப்ப - அருமையான நடனத்தை ஆட; நோக்கி -
அதனைப் பார்த்தவாறும்........ ( - அசை).

     பாணியின் ஆரியர் என்று பாடங்கொண்டு ஆரியக் கூத்து எனப்
பொருள் கூறலும் உண்டு.22

3089.இருந்தனன் - உலகங்கள் இரண்டும்
     ஒன்றும், தன்
அருந் தவம் உடைமையின்,
     அளவு இல் ஆற்றலின்
பொருந்திய இராவணன்,
     புருவக் கார்முகக்
கருந் தடங் கண்ணியர்
     கண்ணின் வெள்ளத்தே.

    தன் அருந்தவம் உடைமையின் - தன்னுடைய அரிய தவ வலிமைப்
பேற்றினால்; உலகங்கள் இரண்டும் ஒன்றும் - மூன்று உலகங்களையும்;
அளவு இல் ஆற்றலின் பொருந்திய - (தன்) வரம்பிலா வலிமையோடு
தன் கீழ்ப் பொருந்தும்படி பெற்ற; இராவணன் - இலங்கை வேந்தனாகிய
இராவணன்; புருவக் கார்முகக் கருந்தடங் கண்ணியர் - வில் போன்ற
புருவங்களையும் கரிய பெரிய கண்களையும் உடைய மாதர்களின்;
கண்ணின் வெள்ளத்தே - பார்வைப் பெருக்கினிடையே; இருந்தனன் -
வீற்றிருந்தான்.

     கோகர்ண ஆசிரமத்தில் ஒவ்வொரு தலையாய் அரிந்திட்டு ஓமம்
செய்த பெருந்தவத்தால் வரபலம் பெற்றவன் இராவணன். முன்
இருபத்திரண்டு செய்யுள்களின் பொருள் இச் செய்யுளால் முடிவுற்றது.